வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (16:04 IST)

பொதுச்செயலாளர் ஆகிறார் ஓ.பி.எஸ்? - தினகரனுக்கு செக் வைக்கும் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 

 
இரண்டு மாதம் அமைதியாக இருப்பேன் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கூறிய கெடு வருகிற ஆகஸ்டு 5ம் தேதியோடு முடிவடைகிறது. 
 
எனவே, அதிமுகவில் தற்போது டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிச்சாமியும் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. வரும் 5-ஆம் தேதி கட்சியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தலைமை கழகத்துக்கு வர வேண்டும் என தினகரன் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனை நடக்க உள்ளது. மேலும், ஒருபக்கம் ஓ.பி.எஸ்-ஸும் தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.
 
இந்நிலையில், தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்கு செக் வைக்கும் வகையில், நாம் இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் அணி இரண்டும் மறைமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அதில், சிலருக்கு அமைச்சர் பதவிகளும், சிலருக்கு எம்.பி. பதவியும் கொடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது. முக்கியமாக, அதிமுக பொதுச்செயலாளர் பதவி ஓ.பி.எஸ்-ற்கு அளிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. இதன் மூலம், கட்சி மற்றும் ஆட்சி பணிகளில் இருந்து சசிகலா குடும்பத்தினரை நிரந்தரமாக ஒதுக்கி வைக்கும் முயற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
 
அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம் தற்போது தேர்தல் ஆணைய விசாரணையில் இருக்கிறது. எனவே, அதன் முடிவு வெளிவந்த பின், ஓ.பி.எஸ்-ற்கு பதவி அளிக்கப்படலாம் என அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.