வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 26 அக்டோபர் 2016 (15:36 IST)

மீண்டும் 3 கண்டெய்னரில் கோடிக்கணக்கான பணம் இருந்ததால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டைக்கு கோடிக்கணக்கான ரூபாய்களுடன் 3 கன்டெய்னர் லாரிகள் நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

 
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
 
அங்கு ரயில் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரயில் பெட்டியின் மேற்கூரை வெல்டிங் கருவி மூலம் உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த 4 மரப்பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்த 500 ரூபாய் கட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
 
இந்த சம்பவத்தை அடுத்து வங்கிகளுக்கு எடுத்து செல்லும் பணம் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 4 வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் 3 கன்டெய்னர் லாரிகளில் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
நேற்று காலை 9 மணிக்கு கோவையில் இருந்து இந்த லாரிகள் புறப்பட்டன. இந்த கண்டெய்னர்களுக்கு உதவி கமிஷனர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பிற்காக லாரிக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வந்தனர்.
 
இந்த கண்ட்ய்னர் லாரிகள் மதியம் 1.30 மணியளவில் உளுந்தூர்பேட்டைக்கு வந்தது. அங்கு லாரி டிரைவர்கள் மற்றும் காவல் துறையினர் சாப்பிடுவதற்கு திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே இருக்கும் தனியார் ஓட்டலில் 3 கன்டெய்னர் லாரிகளையும் நிறுத்தினர்.
 
இந்த தகவல் முன்கூட்டியே விழுப்புரம் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.  இதனால், காவல் ஆய்வாளர் குமாரய்யா தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.
 
கையில் துப்பாக்கி ஏந்தியபடி காவலர்கள் குவிக்கப்பட்டு கண்ட அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பதற்றமடைந்தனர். அதன் பின்னர் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே கன்டெயினரில் பணம் எடுத்து செல்வது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.