வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2017 (10:06 IST)

சோப்பு போட்டு குளிக்காதீங்க: அமைச்சரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சோப்பு போட்டு குளிக்காதீங்க: அமைச்சரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சில மாதங்களுக்கு முன்னர் வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாக்கோல் மூலம் அதனை தடுக்க விரைந்தார். ஆனால் பல்பு வாங்கி திரும்பிய அமைச்சர் செல்லூர் ராஜூவை சமூக வலைதளங்களில் கலாய்த்து தள்ளினார்கள்.


 
 
அதே போன்று வீடுகளில் உபயோகிக்கும் சோப்பு நீரால்தான் இரண்டு நாள்கள் வரை நொய்யல் ஆற்று நீர் நுரை படர்ந்து வந்ததாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கூறிய கருத்து ஒன்று தெர்மாக்கோல் விவகாரம் போல சமூக வலைதளங்களில் கலாய்க்கப்படுகிறது.
 
மழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடியதயடுத்து கடந்த 19-ஆம் தேதி முதல் ஆற்றில் வெண்மையாக நுரை படர்ந்து தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்தனர்.
 
சலவை ஆலைகளிலிருந்து இரவு நேரத்தில் கழிவுநீர் திறந்துவிடப்பட்டிருக்கலாம் எனவும், சலவை ஆலைக் கழிவுகளே இதுபோன்ற நுரைகள் படர காரணமாக இருக்கும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
 
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள சாய, சலவைத் தொழிற்சாலைகள் சங்கத்தின் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், குளம் மற்றும் நொய்யல் ஆற்றை பார்வையிட்டோம். அதில் எங்கேயும் பாதிப்பு ஏற்படவில்லை. குடிக்கும் நீரில் 500 கிராம் வரை உப்புச்சத்து இருக்கலாம். நொய்யல் ஆற்று நீரில் 1200-1300 வரையும் குளத்தில் 700 வரை உப்புச்சத்து உள்ளது.
 
கோவையிலிருந்து வரும் சாக்கடை கழிவுநீர், நொய்யல் ஆற்றில் கலந்துள்ளதால்தான் நுரை வருகிறது. நாம் அனைவரும் சோப்பு உபயோகப்படுத்துகிறோம். அந்த நீரும் கழிவுநீரில் சேர்ந்து வருவதால், இரண்டு நாள்கள் மட்டும் தண்ணீர் நுரை போல வந்தது என கூறினார்.
 
அமைச்சரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் தெர்மாக்கோல் விவகாரத்துக்கு இணையாக தற்போது விமர்சிக்கப்பட்டும், கலாய்க்கப்பட்டும் வருகிறது. நொய்யல் ஆறு முழுவதும் நுரைகள் குவிந்திருக்கும் போது அந்த நுரைக்கு நாம் பயன்படுத்தும் சோப்பு தான் காரணம் என ஒரு பொறுப்புள்ள சுற்றுச்சூழல் துறை அமைச்சரே பேசியுள்ளது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.