1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (08:37 IST)

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது

தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் பரவலாக இன்றும்(அக், 19) மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில்  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன்காரணமாக சென்னை மற்றும் பிறபகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் சென்னை நகரில் தொடர்ச்சியாக மழை கொட்டி வருவதால் நகரமே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

 
இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ஈரப்பதம் நிரம்பிய காற்று தென் இந்திய பகுதியில் நிலவி பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
 
தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே நிலையில் தான் நீடிக்கிறது.எனவே தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்றும் (அக், 19) மழை பெய்யும். 
 
அக்டோபர் 20 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.