வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 ஜூன் 2019 (08:57 IST)

வெற்றிடத்தை நிரப்பிவிட்டேன்: ரஜினிக்கு ஸ்டாலின் மறைமுக பதில்

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு பின்னர் ஆளுமையுள்ள தலைவர் இல்லை என்றும், அரசியல் வெற்றிடம் தோன்றியிருப்பதாகவும், அந்த வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும் என தான் நம்புவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ரஜினியின் இந்த கருத்தை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும் ஒருசிலர் மறுத்தனர். குறிப்பாக திமுக தலைவராக முக ஸ்டாலின் பொருப்பேற்றுக்கொண்டதால் திமுகவை பொருத்தவரை வெற்றிடம் இல்லை என அவரது தரப்பினர் கூறி வந்தனர்
 
இந்த நிலையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்று காட்டியுள்ளதால் தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை என நிரூபணம் ஆகிவிட்டதாக ரஜினிக்கு ஸ்டாலின் தரப்பு மறைமுகமாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இத்தனை ஆண்டுகள் அதிமுக ஆட்சி நீட்டித்திருக்க முடியாது என்றும் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் மீண்டும் ஸ்டாலினுக்கு தோல்விதான் ஏற்பட்டுள்ளது என்றும் ரஜினி தரப்பினர் கூறி வருகின்றனர்.
 
குறிப்பாக கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் மக்களவை தேர்தலை விட சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக கவனம் செலுத்தி குறைந்தது 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருப்பார் என்றும், அந்த ராஜதந்திரத்தை ஸ்டாலினால் செய்ய முடியவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றிடம் உண்மையில் நிரப்பப்பட்டதா? இல்லையா? என்பது 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிந்தவுடன் தான் தெரியும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது