வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (22:02 IST)

உள்ளாட்சி இடைத் தேர்தலுக்குத் தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலுக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
 
இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை, 2014 செப்.12 அன்று, தலைமை நீதிபதி கே.எஸ். கவுல், நீதிபதி எஸ். சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, தேர்தல் விதிமுறைகளின் படி, அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேட்பு மனுக்களைப் பெறுவதில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றும் எனவே அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
 
மனுக்கள் பெறப்படும் ஏழு நாள்களும் வேலை நாள்களாக இருக்க வேண்டும் என்று சட்ட விதியில் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணையை ரத்து செய்ய முடியாது என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
 
இதற்கிடையே, பாஜக அறிவித்த நெல்லை மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளார். இது தொடர்பான விரிவான செய்தி இங்கே.