1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 4 மே 2016 (19:49 IST)

4 நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை: சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வரும் 14, 15, 16 மற்றும் 19 ஆகிய தினங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


 
 
இந்த தேர்தலில் மதுவிலக்கு வாக்குறுதியை முன்வைத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும், தேர்தல் சமையத்தில் மது வினியோகம் நடைபெறாமல் இருக்காது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராஜ்.
 
இது குறித்து ஆட்சியர் கோவிந்த ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
 
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மே மாதம் 14, 15 மற்றும் 16ம் தேதி வரை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003. விதி 12(2)ன்படி வருகின்ற 16.05.2016 அன்று தமிழகத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2016 -ஐ முன்னிட்டு 14.05.2016 காலை 10.00 மணி முதல் 16.05.2016 அன்று நள்ளிரவு 12.00 மணிவரையிலும், மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான 19.5.2016 அன்று முழுவதும், சென்னை மாவட்டத்திலுள்ள எப்எல்1 உரிமம் கொண்ட அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனைச்சார்ந்த பார்கள், எப்எல்2 முதல் எப்எல்11 வரை அதனைச் சார்ந்த பார்கள் மற்றும் ஓட்டல்களின் பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்கவேண்டும்.
 
அன்றைய தினங்களில் கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால், மதுபான சட்டவிதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.