1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2016 (16:43 IST)

எந்த கடவுளும் என் மனைவியை காப்பாற்ற வில்லை : கதறும் மதுரை முத்து

சாமி கும்பிடப்போன என் மனைவியை எந்த சாமியும் காப்பாற்ற வில்லை. எனவே இனி நான் சாமியே கும்பிடப் போவதில்லை என்று நகைச்சுவை நடிகர் மதுரை முத்து கூறியுள்ளார்.


 

 
சன் டிவி-யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி பேச்சாளரும், தொலைக்காட்சி நடிகருமான மதுரை முத்துவின் மனைவி பிப்ரவரி 4ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி பலியானார்.
 
32 வயதான மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் சிவகங்கையில் உள்ள கோவிலுக்கு செல்லும்போது, திருப்பத்தூர் அருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாருமாறாக ஓடி அருகில் உள்ள ஒரு மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானர்.
 
நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்ற மதுரை முத்துக்கு அம்மை நோய் தாக்கியது. எனவே கணவனுக்கு சீக்கிரம் குணமாக வேண்டி சாமி கும்பிடவே வையம்மாள் கோவிலுக்கு சென்ற போதுதான் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
தன் மனைவியை பிரிந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியாமல் மதுரை முத்து தவித்து வருகிறார். வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி அவர்களுக்கு திருமண நாள். எனவே மனைவிக்கு தெரியாமல், முத்து பல்வேறு ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தாராம். அவரின் மனைவியும் முத்துவிற்கு ஒரு காரை பரிசாக தர வேண்டும் என்று நினைத்திருந்தார். அதற்குள் இப்படி நிகழ்ந்து விட்டது. 
 
தன் மனைவியின் மரணம் பற்றி முத்து பேசும் போது “எப்போதும் சாமியை கும்பிட்டுக் கொண்டிருந்த என் மனைவியை எந்த சாமியும் காப்பாற்றவில்லை. எனவே இனி நான் எந்த சாமியையும் கும்பிடப் போவதில்லை. என்னுடைய வீட்டில் என் மனைவிக்கு கோவில் கட்டி அவரையே என் கடவுளாக வழிபடுவேன்” என்று உருக்கமாக கூறினார்.