வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 ஏப்ரல் 2018 (11:32 IST)

வாயை விட்டு மாட்டிக்கொண்ட ரஜினி - வச்சு செய்யும் நெட்டிசன்கள்

நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவலர்கள் மீது தாக்குதல் தொடுத்தது தவறு என ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வாலஜா சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சீமான், கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா, வெற்றிமாறன், களஞ்சியம், ராம் உள்ளிட்ட பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மேலும், நாம் தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 
 
அப்போது அவர்களின் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதில் இயக்குனர் வெற்றிமாறன் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடமே கலவர களமானது. 
 
அந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “ வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், திருச்சியில் காவலரால் தாக்கப்பட்டு உஷா மரணமடைந்த போது வாயை திறக்காத ரஜினி, இதற்கு மட்டும் ஏன் கருத்து தெரிவிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 
மேலும் “காவல்துறை அநீதி பக்கம் நின்று மக்கள் மீது வன்முறையை ஏவி விட்டால், அவர்களை தட்டி கேட்பதும் நல்ல கலாச்சாரம் தான்.இந்த வன்முறை கலாச்சாரத்தை திரையில் காட்டி, கைதட்டல் வாங்கி சம்பாதித்த நடிகர்கள் எல்லாம் அறிவுரை வழங்குவது தான் எந்த கலாச்சாரம்னு தெரியல. தெரிஞ்சா சொல்லுங்க தலிவா” என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
ஒரு சிலரோ, ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, டெல்லியில் விவசாயிகள் நிர்வாணமாக ஓடிய போது, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆட்டோக்களையும், குடிசைகளையும் போலீசாரே கொளுத்திய போது, வயதான பெண்மணிகளை ஒரு போலீஸ் அதிகாரி கன்னத்தில் அறைந்த போது, கர்நாடகாவில் தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்ட போது ரஜினி என்ன கோமாவில் இருந்தாரா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
மேலும், ரஜினி பாஜகவின் ஆதரவாளர். அதனால்தான்  இப்படி கருத்து தெரிவிக்கிறார் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.