வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 10 டிசம்பர் 2016 (14:03 IST)

அடுத்து எல்லாமே சசிகலாதான் - வாய் விட்டு மாட்டிக் கொண்ட நவநீத கிருஷ்ணன்

அதிமுக கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் சசிகலாதான். அவரை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என மேல் சபை அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, அதிமுக அடுத்த தலைமை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்பதில் பல்வேறு யூகங்களும் தகவல்களும் பரப்பப்படுகின்றன.
 
பல வருடங்களாக ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த அவரின் தோழி சசிகலா அடுத்த தலைமைக்கு வருவார் என்றும், அவரே அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த பதவிக்கு போட்டிகள் நிலவுவதாகவும், கட்சியினருக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
 
இந்நிலையில், இன்று ஒரு தனியார் தொலைகாட்சியின் நேர்காணல் நிகழ்ச்சியில் அதிமுக மேல் சபை எம்.பி நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவரிடன் சராமாரியான கேள்விகள் கேட்கப்பட்டது.
 
அதற்கு பதில் கூற முயன்ற அவர், சசிகலாதான் அடுத்த தலைமை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டது போலவே பேசினார். இதை சரியாக பிடித்துக் கொண்ட பத்திரிக்கையாளர், அவரிடம் கேள்விகளுக்கு மேல் கேள்விகளை தொடுத்துக் கொண்டே இருந்தார்.
 
இதனால், என்ன செய்வது.. எப்படி பதில் சொல்வது.. இப்படி வாய் விட்டு மாட்டிக் கொண்டேமே.. என்கிற பாணியில் நவநீதகிருஷ்ணன் முழித்தார். ஏதேதோ பேச முயன்று வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினார்.
 
ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுடன் பல வருடங்கள் ஒன்றாக இருந்தவர் சசிகலா. அவருக்கும் எல்லாம் தெரியும். கட்சியை வழிநடத்தக்கூடிய திறமை அவரிடம் உண்டு. அவரை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அதில் எந்த பிரச்சனையும் இல்லை” என அவரே ஒப்புக் கொண்டு விட்டார்.
 
சற்று நேரத்திற்கு முன் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் “பொதுச்செயலாளர் பதவி குறித்து வெளியான தகவல் அனைத்தும் வதந்தியே. விரைவில் கூட்டப்படும் பொதுக்குழுவில், கட்சியின் பொதுச்செயலாளரை நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பார்கள். இதுவரை அந்த பதவிக்கு எந்த போட்டியும் ஏற்படவில்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.