1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (12:58 IST)

திரைமறைவு அரசியலில் தமிழகத்தை ஆட்டிப்படைத்த நடராஜன்....

உடல் நலக்குறைவு ஏற்பட்டு சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று இரவு மரணமடைந்தார்.

 
ஆர்.நடராஜனை பற்றி தமிழக மக்களுக்கு பெரிதாக தெரியாது. சசிகலாவின் கணவராக  மட்டுமே அவர் அறியப்பட்டார். அதிகபட்சமாக அவர் புதிய பறவை என்கிற பத்திரிக்கையின் ஆசிரியராகவும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகவும், தமிழ் ஆர்வலராக மட்டுமே அவர் ஊடகங்கள் அவரை வெளிக்காட்டின. ஆனால், கடந்த 35 வருடங்களாக திரைமறைவு அரசியலை நடத்தி தமிழக அரசியலை நடராஜன் ஆட்டிப் படைத்தார் என்பது பலருக்கும் தெரியாது.
 
1967ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக தமிழக அரசு பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர்தான் நடராஜன்.  அதன் பின் 1976ம் ஆண்டு அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின் மீண்டும் 1980ம் ஆண்டு அதே பணியில் சேர்ந்தார். 
 
எம்.ஜி.ஆர் உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டு பலவீனமாக இருந்த போது, அவருக்கு பின் அதிமுகவை நடத்த ஜெயலலிதாவே சரியான நபர் எனவும், அவரை வைத்தே நாம் பல காரியம் சாதிக்கலாம் என கணக்குப் போட்ட நடராஜன், சரியான நேரத்தில் தனது மனைவி சசிகலாவை போயஸ்கார்டனுக்கு அனுப்பி ஜெ.வின் தோழியாக அவரை மாற்றினார். அதன் பின் நடராஜன் அறிவுரைப்படியே சசிகலா அனைத்து காரியங்களையும் செய்து வந்தார். அதோடு மட்டும் நிற்காமல், ஜெ.விற்கு அரசியலில் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் நடராஜனே கற்றுக்கொடுத்தார். அவரை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கலை மக்கள் தொடர்பு அதிகாரியான நடராஜனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனவே, எம்.ஜி.ஆர் பலவீனமடைந்த போது, ஊடகங்கள் மூலம் ஜெ.வை முன்னிறுத்தி மக்களிடையே அவரை நடராஜன் பிரபலப்படுத்தினார். 

 
1989ம் ஆண்டு, அரசியலில் இருந்து விலகுவது என முடிவெடுத்த ஜெ, ஆளுநரிடம் கொடுப்பதற்காக ராஜினாமா கடிதத்தையும் எழுதியிருந்தார். ஆனால், அந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் வழியிலேயே, அதைக் கைப்பற்றி நடராஜன் தன்வசம் வைத்துக்கொண்டார். ஆனால், ஒரு வழக்கில் நடராஜனை கைது செய்ய அவரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றினர். அப்போது கருணாநிதி முதல்வர் என்பதால் அந்த கடிதம் அவரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
 
அடுத்த நாள் ஜெ.வின் ராஜினாம கடிதம் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியானது. இதுக்கண்டு ஜெயலலிதா பொங்கி எழுந்தார். அப்போது, சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா இதுபற்றி பிரச்சனை எழுப்ப சட்டசபை களோபரமானது. கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி உடைந்தது. ஜெ.வும் தாக்கப்பட்டார். அதற்கு பின், நான் முதல்வராகியே ஆளுநர் மாளிகை செல்வேன் என சபதம் போட்ட ஜெயலலிதா, கூறிய படியே 1991ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றினார். அதுதான் கருணாநிதி செய்த மிகப்பெரும் தவறாக பார்க்கப்படுகிறது. ஜெ.வின் கடிதம் மட்டும் பத்திரிக்கைகளில் வெளிவராமல் இருந்திருந்தால், தற்போது திமுகவிற்கு சிம்ம சொப்பனாமாக அதிமுக இருந்திருக்கும் எனக் கூறமுடியாது. அதற்கு காரணம் நடராஜன் என்பதில் மிகையில்லை.


 
அதன் பின்பு போயஸ் கார்டனில் இருந்து நடராஜன், சசிகலா உள்ளிட்ட பலரையும் ஜெயலலிதா வெளியேற்றினார். ஆனால், சசிகலாவை மட்டும் மீண்டும் இணைத்துக்கொண்டார். அதன் பின், திரை மறைவு அரசியலை செய்து வந்தார் நடராஜன்.  அரசுத்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் அவருடன் நெருக்கம் காட்டி வந்தனர். அனைத்து கட்சிகளுடன் நெருக்கம் காட்டினார். ஜெ. முதல்வராக இருந்த அனைத்து காலகட்டங்களிலும் நடராஜன் ஒன்று நினைத்தால் அது நடக்கும். 
 
ஆனால், அரசியல் ரீதியாக அவரை ஜெ. வளரவிடவில்லை. அவரின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக ஒரு  உளவுத்துறை குழுவையே ஜெ அமர்த்தியிருந்தார். மேலும், பல வழக்குகளில் நடராஜன் கைதும் செய்யப்பட்டார். காரணம், டெல்லியில் பல தலைவர்களுடன் நட்பு வைத்திருந்த நடராஜன், அதிமுக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்து தன்னுடைய ஆட்சியை நடராஜன் கவிழ்த்து விடுவார் என்கிற அச்சம் கடைசி வரைக்குமே ஜெ. விற்கு இருந்ததாக கூறப்படுகிறது.
 
ஜெ.வின் மறைவிற்கு பின் தனது மனைவி சசிகலாவை அதிமுகவின் தலைவியாக மாற்ற வேண்டும் என நடராஜன் ஆசைப்பட்டார். அதைத் தொடர்ந்தே அதிமுகவின் பொதுச்செயலாளராக அவர் பதவி அமர்த்தப்பட்டார். முதல்வர் பதவிக்கும் குறி வைத்தார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அவரை சிறைக்கு கொண்டு போனது. நடராஜனின் கனவு பலிக்காமல் போனது. 
 
இந்நிலையில்தான், உடல் நலக்குறைவால் நடராஜன் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சென்னை குளோபல் மருத்துவமனையில் மரணமடைந்தார். 35 வருடங்களாக திரை மறைவு அரசியல் மூலம் பல காரியங்களை சாதித்துக் காட்டிய நடராஜன் அரசியலில் இருந்தும், சொந்த வாழ்க்கையிலிருந்தும் ஓய்வு பெற்றுக்கொண்டார்.