1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 22 அக்டோபர் 2016 (18:28 IST)

முதல்வர் குறித்து வதந்தி பரப்பியதாக கைதானவர்களை விடுவிக்க வேண்டும்: ஆம்னெஸ்டி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினார்கள் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டுமென ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியுள்ளது.
 

 

கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 4 வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இது குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வதந்திகளைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், முதல்வர் குறித்த அவதூறான தகவல்களை முகநூலில் பதிவு செய்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி மீது சில நாள்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்கள் வந்தன. இந்தப் புகார்களின் அடிப்படையில் சென்னை பெருநகர காவல்துறை முதல் கட்டமாக 52 வழக்குகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.
 
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினார்கள் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டுமென ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியுள்ளது.

பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எழுதியதாக குற்றம்சாட்டப்பட்டு, இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகவும், 8 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆம்னெஸ்டி சுட்டிக்காட்டியுள்ளது.
 
மேலும், இவற்றில் பெரும்பாலான வழக்குகள் தமிழக ஆளும் கட்சியினர் கொடுத்த புகாரின் பேரிலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதையும் ஆம்னெஸ்டி குறிப்பிட்டுள்ளது.
 
முதல்வர் குறித்த துல்லியமான தகவல்களை சரியான நேரத்தில் அளிப்பதன் மூலமே வதந்திகளை நிறுத்த முடியும் எனவும் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதன் மூலம் அதைச் செய்ய முடியாது எனவும் ஆம்னெஸ்டி கூறியிருக்கிறது.