வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (10:47 IST)

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது குறித்த எச்.ராஜாவின் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்

பள்ளியில் தேர்வு எழுதும் நேரங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்ற எச்.ராஜாவின் பேச்சுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து மு.க.ஸ்டாலின் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
 
பாஜக தலைவர் அமித்ஷா மதுரைக்கு வருகின்ற நேரத்தில், மாநிலத்தில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் முயற்சியில் எச்.ராஜா போன்றவர்கள் பேசுவது கண்டனத்திற்குரியது.
 
“பள்ளியில் தேர்வு எழுதும் நேரங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும்” என்று அவர் பேசியிருப்பது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
 
மதச்சார்பற்ற நாட்டில் பர்தா அணிந்து கொள்வது என்பது இஸ்லாமிய சமுதாயப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள சுதந்திரம் மட்டுமல்ல அவர்களின் உரிமையுமாகும் என்பதை மனதில் வைத்து இதுபோன்ற வெறுப்பூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
மத நல்லிணக்கம் பேணும் தமிழகத்தில் அமைதிக்கு எந்த பங்கமும் வந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்பது அரசியல் கட்சிகளின் கடமை என்பதை உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தமது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.