வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (15:36 IST)

3 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

குடும்ப பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் தனது மூன்று ஆண் குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பூர், கோவில் வழி, பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் மனைவி ராஜேஸ்வரி (26). இவர்களுக்கு தருண் (3) மற்றும் கவின், கவி என்கிற ஒன்றரை வயது இரட்டை குழந்தைகள் இருந்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக, கடந்த சில மாதமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். ராஜேஸ்வரி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வாடகை வீட்டில், தாய் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டு காம்பவுண்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் தருண், கவின், கவி ஆகிய மூன்று குழந்தைகளையும் தூக்கி போட்டு விட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீர் தொட்டியில் மூழ்கிய குழந்தைகளையும், தாய் ராஜேஸ்வரியையும் மீட்டனர். ஆனால், மூன்று குழந்தைகளும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருடன் மீட்கப்பட்ட ராஜேஸ்வரிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தற்கொலைக்கு முயன்ற ராஜேஷ்வரி எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், சொக்கலிங்கம் என்பவரிடம் ராஜேஷ்வரி, ரூ3 லட்சம் சீட்டு போட்டிருந்ததாகவும், பணத்தை தராமல் சொக்கலிங்கம் ஏமாற்றி விட்டதாகவும், மேலும், வரதட்சணை கொடுமையால் கணவனை பிரிந்த வேதனையிலும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. 
 
அதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ரூரல் காவல்துறையினர், உயிர்பிழைத்த ராஜேஷ்வரியை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைப்பற்றப்பட்ட குழந்தைகளில் உடல்களை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.