வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: சனி, 19 ஜூலை 2014 (15:49 IST)

மனைவி என்னை மதிக்காததால் கழுத்தை அறுத்துக் கொன்றேன்: மனைவியை கொன்ற கணவன் வாக்குமூலம்

மனைவிக்கு அரசு வேலை கிடைத்ததால் அவர் என்னை மதிப்பதில்லை. இதனால் அவரை கழுத்தை அறுத்து கொன்றேன் என்று கைதான கணவன் காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் அத்திப்பள்ளி சர்ஜாபுரம் சாலையில் வசித்து வருபவர் பிரசாந்த் (30). இவரது மனைவி மஞ்சுளா (27). இவர் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளராக (டிரக் இன்ஸ்பெக்டர்) பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பிரசாந்த் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக கணவன்- மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மஞ்சுளா, சர்ஜாபுரம் செல்லும் ரோட்டில் பிதிருகுப்பே ஏரிக்கரை அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். 
 
அத்திப்பள்ளி காவல்துறையினர் மஞ்சுளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது கணவர் பிரசாந்தை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில் அவர் மஞ்சுளாவை கழுத்தை அறுத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவரை கைது செய்தனர். 
 
பிரசாந்த் அளித்துள்ள வாக்குமூலம்: மஞ்சுளாவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அரசு வேலை கிடைத்தது. அப்போது முதல் அவர் என்னை மதிப்பதில்லை. மேலும் அவர் பிறருடன் பேசி வந்தது எனக்கு பிடிக்கவில்லை. 
 
என்னிடம் கேட்காமல் டிரைவிங் பள்ளிக்கு சென்று வந்தார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். நேற்று முன்தினம் மாலை கோயிலுக்கு செல்லலாம் எனக்கூறி காரில் அழைத்து சென்றேன். பிதிருகுப்பே சென்றதும், நான் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன்றேன் என்று அவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, பிரசாந்த், சிறையில் அடைக்கப்பட்டார்.