ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு - கருணாநிதி
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இது குறித்து கருணாநிதி பேசியதாவது:-
“எந்த நோக்கத்துக்காக திமுக தோன்றியதோ, அந்த நோக்கங்கள் எல்லாம் நிறைவேறிவிட்டனவா என்றால், இல்லை. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. அது இன்னும் நிறைவேறவில்லை.
எனவே, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது மட்டும் நமது நோக்கம் இல்லை. ஆட்சியை எப்படி வேண்டுமானாலும் பிடித்துவிடலாம்.
இப்போது தேர்தலில் பணநாயகமே கோலோச்சுகிறது. பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெறலாம் என்ற நிலை இருக்கிறது. அந்த நிலையை மாற்றி, ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்“ என்று கருணாநிதி கூறினார்.