வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2017 (11:15 IST)

உல்லாசத்துக்கு இடையூறு: கள்ளக்காதலனுடன் சேர்ந்து இரண்டரை வயது குழந்தையை கொன்ற தாய்

கள்ளக்காதலுக்கு இடையூறாகா இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது இரண்டரை வயது குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டிக்குள் வீசிய தாயை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 

கடலூர் மஞ்சக்குப்பம் புவனேஸ்வரி நகரை சேர்ந்த முகமது அலி என்பவருக்கும் ஆஷா என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு அம்ரின்பானு (4), ஹாத்திபா (2½) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

பின்னர், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 6 மாதங்களுக்கு முன்பு விவாகரத்துப் பெற்றனர். இதனை அடுத்து முகமது அலி, ஷகிலா பானு என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார்.

இதற்கிடையில், முகமது அலியின் சகோதரர் மொய்தீனை சந்திக்க, பூவராகவமூர்த்தி என்பவர் அடிக்கடி அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, ஷகிலா பானுவிற்கும், பூவராகவமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

முகமது அலியின் மூத்த மகள் அம்ரின் பானு உருது வகுப்புக்கு செல்லும் சமயத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது இரண்டரை வயது குழந்தை ஹாத்திபாவும் மட்டும் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஷகிலா பானுவும், பூவராகவமூர்த்தியும் உல்லாசமாக இருந்துள்ளனர்.  குழந்தை ஹாத்திபா முன்பக்க அறையில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, குழந்தை படுக்கை அறைக்கு வந்து ஷகிலாபானுவை கூப்பிட்டாள்.

இதனால் ஆத்திரமடைந்த பூவராகவமூர்த்தி, குழந்தை ஹாத்திபாவை தாக்கியுள்ளார். அவள் சுவரில் மோதி மயங்கி விழுந்துள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து, மயக்க நிலையில் கிடந்த ஹாத்திபாவை கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

பிணத்தை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் வீசியுள்ளனர். அதன் பின்னர், குழந்தையை காணவில்லை என்று ஷகிலா பானு நாடகம் ஆடியுள்ளார். வீட்டுக் குழாயில் இருந்து வந்த தண்ணீரில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, சந்தேகத்தின் பேரில் தண்ணீர் தொட்டியை பார்த்தபோது குழந்தை பிணமாக கிடந்தது தெரிய வந்துள்ளது.

குழந்தையின் உடலை பார்த்ததும் முகமது அலி கதறி அழுதார். காவல் துறையினர் ஷகிலாபானுவை விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஷகிலா பானுவுக்கும், பூவராகவமூர்த்திக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் ஷகிலாபானு, பூவராகவமூர்த்தி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான பூவராகவமூர்த்தியும் இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.