வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 10 அக்டோபர் 2015 (12:31 IST)

குடி குடியை கெடுத்தது; குழந்தைகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்: சென்னையில் பரிதாபம்

கணவரின் குடிப்பழக்கத்தால் குழந்தைகளையும் கொன்று, தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணைப் பற்றிய செய்திய வெளியாகியிருக்கிறது.


 
 
சென்னை கீழ்பாக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்தோஷ்(38). இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். சௌகார்பேட்டையில் பார்சல் அனுப்பும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரின் மனைவி மம்தா(35).
 
இந்த தம்பதிகளுக்கு யாஷி(14) என்ற மகளும், அனுஷ்(7)என்ற மகனும் இருக்கிறார்கள். சந்தோஷிற்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் இரவு வீட்டிற்கு குடித்துவிட்டு வருவதும், இதனால் மம்தா அவருடன் சண்டை போடுவதும் வழக்கமான ஒன்றாக இருந்தது. மம்தா எவ்வளவு சொல்லியும் சந்தோஷ் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை இரவும் சந்தோஷ் அளவுக்கு அதிகமான குடிபோதையில் வீட்டிற்கு வந்திருக்கிறார். இதனால் கணவன், மனைவிக்குள் சண்டை வந்துள்ளது. அடுத்த நாள் சந்தோஷ், மம்தாவிடம் பேசவில்லை. மம்தா செல்போனில் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் அவர் போனை எடுக்கவில்லை.
 
இதனால் விரக்தி அடைந்த மம்தா, குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதன்படி, குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு,   அவரும் விஷம் அருந்தி விட்டார்.
 
வீட்டிற்கு வந்த சந்தோஷ் மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, மூவரையும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் மம்தா அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொண்டார்.
 
சிகிச்சையில் மம்தாவின் உடல் நலம் தேறி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்தல், குழந்தைகளைக் கொன்றது என இவர் மீது கீழ்பாக்கம் போலிசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
இந்நிலையில் மம்தா அளித்த வாக்குமுலத்தில், குழந்தைகளுக்கு முதலில் விஷம் கொடுத்ததாகவும், இவர்கள் மயங்கிய பிறகு அவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளர்.