வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 14 மே 2019 (17:04 IST)

அரசியலை விட்டு விலக தயார்: ஸ்டாலின் அதிரடி சவால்!

பாஜகவுடன் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
நேற்று நடைபெற்ற சந்திரசேகரராவ், ஸ்டாலின் சந்திப்பு தமிழக அரசியலை மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் விளைவாக 3வது அணி அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் இந்த சந்திப்புக் குறித்து அமைச்சர் ஜெயக்குமார், 3வது அணி அமைக்க மட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள பாஜகவுக்கும் தூது விட்டு 5 கேபினட் அமைச்சர்கள் பதவிக் கேட்டுள்ளனர். அவர்கள் எல்லோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பதவிப் பெறும் முடிவில் உள்ளனர் எனக் கூறியுள்ளார். 
பின்னர் இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேட்கப்பட்டது. தமிழிசை இந்த தகவலை உண்மை என ஒப்புக்கொண்டார். பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார் என தமிழிசை மேலும் பரபரப்பை கூட்டினார். 
 
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், பாஜகவுடன் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார். நிரூபிக்க தவறினால் தமிழிசை, மோடி ஆகியோர் அரசியலைவிட்டு விலகத்தயாரா? என கேட்டுள்ளார். அதோடு, பொய்ப் பேட்டியை அளித்ததன் மூலம் தமிழிசை தன்னை தரம் தாழ்த்திக்கொண்டார் என குறிப்பிட்டுள்ளார்.
இதோடு ஆர்.எஸ்.பாரதி, பாஜகவுடன் திமுக பேசியதாக ஒரு பொய்யை தமிழிசை கூறியுள்ளார். மோடியை மிஞ்சும் வகையில் பொய் சொல்ல முடியும் என்கிற வகையில் தமிழிசை பேசியிருக்கிறார். சந்திரசேகர் ராவ் சந்திப்பு பற்றி புரிந்துகொள்ளாமல் தமிழிசை பேசுவது அரசியல் பக்குவம் இல்லை என்பதை காட்டுகிறது என தனது கருத்தை சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.