1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 20 ஜூலை 2019 (15:58 IST)

வாக்காளர்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதா?

சட்டப்பேரவையில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
 
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் க.பொன்முடி, கடந்தாண்டு முதல்வர் அளித்த பதிலுரையில் முடிவு எடுப்பதில் மக்கள் தெளிவானவர்கள் என்றும், அதை நிரூபிக்கும் வகையில் இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக அணியை மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர் என்றும் பேசினார்.
 
அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "எப்படி வெற்றி பெற்றீர்கள் என்பதை மட்டும் நீங்கள் சொல்லவில்லை. உண்மைக்கு மாறான வாக்குறுதிகளை எல்லாம் சொல்லித்தான் வெற்றி பெற்றீர்கள். அதையும் நீங்கள் கூறினால், நன்றாக இருக்கும்," என்றார்.
 
வரக்கூடிய காலங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், அப்படி வரும்போது கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்றும், சொன்னதை அல்ல, சொல்லாததை செய்வோம் என்றார்.
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே விவாதம் தொடர்ந்த நிலையில், குறுக்கிட்டு பேசிய செல்லூர் ராஜூ, வாய் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்றெல்லாம் பேசமாட்டேன்.

ஏனென்றால் நான் கலைஞரின் பிள்ளை என்று ஸ்டாலின் கூறுவார். தேர்தல் அறிக்கையில் 5 பவுனுக்குக் கீழே கடன் இருந்தால், கூட்டுறவு வங்கியில் மட்டுமல்ல, பொது வங்கியில் கடன் இருந்தாலும் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தார். இதை நிறைவேற்ற முடியுமா? என்றார்.
 
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், "நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு கேளுங்கள். அனைத்துக்கும் பதில் அளிக்கிறோம்," என்றார்.