வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: சனி, 20 மே 2017 (15:34 IST)

மு.க.ஸ்டாலின் தூர்வாரியதினால் தான் குளங்கள் நிரம்பியதா?- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நக்கல்

கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக ஆங்காங்கே பெய்துவரும் தொடர் மழையை அடுத்து சாக்கடைகள் தேங்காமல், கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க கரூர் நகராட்சி பகுதியில் உள்ள புதுக்குளத்துப்பாளையம், சின்னகுளத்துப்பாளையம், பெரியகுளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் சாக்கடைகள் தூர்வாருவது, கழிவு நீரை சுத்தப்படுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


 

இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக போக்குவரத்து அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது வறட்சி நிலவி வந்த நிலையில் அ.தி.மு.க வினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வருண ஜெப நிகழ்ச்சியையும், கடும் யாகங்களையும் நடத்தினர். இதனால் கடந்த மூன்று தினங்களாக அவ்வப்போது தொடர் மழை பெய்து வருவதையடுத்து சுகாதாரப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் கரூர் பெரு நகராட்சிகளில் குப்பைக்கிடங்குகள் மற்றும் சாக்கடை கழிவுகள் அகற்றும் பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது என்றார்.

அப்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் தி.மு.க வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குளித்தலையில் தொகுதியில், நாகனூர், நாதிப்பட்டி ஆகிய பகுதிகளில் பொக்லின் இயந்திரத்தில் ஏறி, மம்முட்டியை பிடித்து தூர்வாரியதினால் தான் குளம் நிரம்பியது என்று தி.மு.க வினர் கூறுகின்றனரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், உடனே அ.இ.அ.தி.மு.க வினராகிய நாங்கள் (எம்.ஆர்.விஜயபாஸ்கர்) தமிழகம் முழுவதும் யாகங்கள் கோயில்களில் நடத்தியதால் தான் மழையே பெய்தது என்று சொல்லக்கூடாதா? என்றும்., தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்காங்கே குளத்தை தூர்வாருவது பேப்பர்களில் செய்தி வருவதற்காகவும், விளம்பரத்திற்காகவும் தவிர வேறொன்றும் இல்லை.

அதே போல, ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் முழுவதும் உள்ள குளம் மற்றும் ஏரிகளை தூர்வாரி அந்த வண்டல் மண்களை விவசாயிகளே பயன்பெற உத்திரவிட்டுள்ளார். இதை தெரிந்தே தான் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துகின்றார் என்றார்.

பேட்டியின் போது கரூர் மாவட்ட அவைத்தலைவர் எ.ஆர்.காளியப்பன், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இருந்தனர்.

-கரூர் சி.ஆனந்தகுமார்