1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 24 டிசம்பர் 2014 (16:03 IST)

எம்ஜிஆர் நினைவுநாள்: ஜெயலலிதா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

எம்ஜிஆரின் 27ஆவது ஆண்டு நினைவுநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
அதிமுகவை உருவாக்கிய தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
 
இதனையொட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் எம்ஜிஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மையாதை செலுத்தி வருகின்றனர்.
 
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, தனது போயஸ் கார்டன் இல்லத்தில், எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அக்கட்சியினரும், பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதிமுக சார்பில் எம்ஜிஆர் சமாதியில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து கட்சியின் பொருளாளர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க அங்கே கூடியிருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் திரும்ப வாசித்து உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். பின்னர் அனைவரும் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
 
இதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சி  நிர்வாகிகள் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
 
தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் உருவ சிலைக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்த பெரியார், எம்ஜிஆர் உருவ படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.