வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (15:10 IST)

தயவு செய்து எல்லா படத்துக்கும் பிரச்சனை செய்யுங்க - மயில்சாமி கோரிக்கை

மெர்சல் படத்திற்கு பிரச்சனை செய்தது போல், மற்ற படங்களுக்கும் செய்தால் சினிமாத்துறை நன்றாக இருக்கும் என நடிகர் மயில்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. 
 
தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.
 
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி பேசியதாவது:
 
ஜி.எஸ்.டி.யால் மக்கள் பாதிக்கப்பட்டதைத்தான் மெர்சல் படத்தில் காட்டியிருக்கிறார்கள். இதில் என்ன தவறு?. சென்சார் முடிந்த பின்பும் படத்தின் காட்சிகளுக்கு விளக்கம் கேட்பது நியாயம் இல்லை. இதில் ஒரு நல்லது நடந்துள்ளது. 
 
பாஜகவினரின் எதிர்ப்பின் காரணமாக மெர்சல் படத்திற்கு இந்தியா முழுவதும் இலவச விளம்பரம் கிடைத்துள்ளது. இதுபோல், வேறெந்த படத்திற்கும் கிடைத்ததில்லை. சர்ச்சைக்குரிய காட்சிகள் திரையில் ஓடியிருந்தால் படம் பார்ப்பவர்கள் மட்டும்தான் பார்த்திருப்பார்கள். ஆனால், தற்போது செல்போன், இணையதளம் என லட்சக்கணக்காணோர் பார்க்கின்றனர். இதற்கு, மத்திய, மாநில அரசுகளே காரணம்.
 
இதேபோல், அனைத்து படங்களுக்கும் அவர்கள் பிரச்சனை கொடுத்தால் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் லாபம் அடையும். எனவே, அரசியல்வாதிகளே.. உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன். இதுபோலவே எல்லா படங்களுக்கும் பிரச்சனை கொடுங்கள்” என கிண்டலாக பேசியுள்ளார்.