வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : புதன், 5 ஏப்ரல் 2017 (06:23 IST)

செல்போன் சார்ஜில் இருக்கும்போதே ஹெட்போனில் பாட்டு கேட்ட வாலிபர் பலி

செல்போன் சார்ஜில் இருக்கும்போது பேசுவதோ அல்லது பாட்டு கேட்பதோ கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் கேட்காமல் ஒருசிலர் செல்போனில் சார்ஜ் ஏறிக்கொண்டு இருக்கும்போது பாட்டு கேட்பதால் விபரீதத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் செல்போனுக்கு சார்ஜ் போட்டிருந்த நிலையில் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.



 


அடையாறு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்த மணிப்பூரை சேர்ந்த பில்லோ ரியாங் என்பவர் சமீபத்தில் தான் தங்கியிருந்த அறையில்  செல்போனுக்கு ஜார்ஜ் போட்டுக்கொண்டே, ஹெட்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்தார் அந்த சமயம் திடீரென ஹெட்போன் மூலம் மின்சாரம் பாய்ந்து, காது நரம்பு வெடித்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த  பில்லோ ரியாங் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து செல்போன் சர்வீஸ் எஞ்சினியர் ஒருவர் கூறியபோது, 'செல்போன்களை நீண்ட நேரம் சார்ஜ் செய்வது தவறு. இரவு முழுவதும் சார்ஜ் போட்டு விட்டு அருகில் தூங்குவது பிரச்னைக்கு வழிவகுக்கும். தற்போது வரும் லித்தியம் பேட்டரிகள் அதிக நேரம் சார்ஜ் செய்யப்படும் போது வெப்பமாகி வெடிக்க வாய்ப்புள்ளது. போனை 100% சார்ஜ் ஏற்றியே தீர வேண்டும் என நினைப்பது தவறு, அதே போல் பேட்டரி குறைந்து விட்டது என எச்சரிக்கை வரும் போதே சார்ஜ் செய்ய வைப்பது தான் நல்லது. குறைந்த சார்ஜ் இருக்கும் போது இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறினார்