வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (14:57 IST)

ஆறுகுட்டியை தொடர்ந்து மாஃபா பாண்டியராஜனும் அணி மாறுகிறார்?: தனிமரமாக ஓபிஎஸ்!

ஆறுகுட்டியை தொடர்ந்து மாஃபா பாண்டியராஜனும் அணி மாறுகிறார்?: தனிமரமாக ஓபிஎஸ்!

ஜெயலலிதா இறந்ததில் இருந்து அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கட்சியை ஒரே அடியாக சசிகலா கபளீகரம் செய்ததை விரும்பாத ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.


 
 
ஓபிஎஸ் தனி அணியாக செயல்படும் போது எதிர்பாராத திருப்பமாக சசிகலா அணியில் முக்கிய நபராக இருந்த அப்போதையை கல்வி மற்றும் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஓபிஎஸ் அணிக்கு தாவி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார்.
 
அதன் பின்னர் ஓபிஎஸ் அணியில் முக்கிய நபராக வலம் வந்தார் மாஃபா பாண்டியராஜன். ஆனால் ஓபிஎஸ் அணியால் பெரும்பானமையான எம்எல்ஏக்களின் ஆதரவை பெற முடியாததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இதனால் மாஃபா பாண்டியராஜன் அமைச்சர் பதவியை இழந்தார்.
 
இந்நிலையில் இடையில் மாஃபா பாண்டியராஜன் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் எடப்பாடி அணியில் வர உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அதனை ஓபிஎஸ் அணியினர் மறுத்தனர். இந்த சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் அணியில் இருந்த கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுகுட்டி ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி அதிரடியாக எடப்பாடி அணியில் இணைந்தார்.
 
இந்நிலையில் தற்போது பேட்டியளித்துள்ள அதிமுகவின் தினகரன் அணியில் உள்ள நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், அதிமுகவின் இரண்டு அணிகளையும் இணைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆறுக்குட்டி போய்விட்டார், மாஃபா பாண்டியராஜனும் இரண்டு நாட்களில் பிரிந்து போய்விடுவார். இறுதியில் ஓபிஎஸ் தனிமரமாக நிற்பார் என தெரிவித்தார்.