செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2019 (14:08 IST)

மு.க.அழகிரியின் கோட்டைக்குள் நுழையும் உதயநிதி!? – போஸ்டர் ஒட்டி ரவுசு காட்டும் இளைஞரணி

மதுரையில் நடைபெறும் தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் உதயநிதி ஸ்டாலினை வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டி வரவேற்றிருக்கிறார்கள் மதுரை இளைஞர் அணியினர்.

மறைந்த முதல்வர் கலைஞரின் முதல் மகனான மு.க.அழகிரி மதுரையில் வசித்து வருகிறார். கலைஞர் காலத்திலிருந்தே மதுரையில் தி.மு.கவுக்கு பெரும் பலமாக இருந்தவர் அழகிரி. அழகிரியின் விஸ்வாசிகள் அவருக்கு போஸ்டர் ஒட்டும்போதெல்லாம் “மதுரை அழகிரியின் கோட்டை” என்றே குறிப்பிடுவார்கள். மதுரையில் அவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தார் அழகிரி.

பிறகு தி.மு.க கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி விவகாரத்தால் அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் திமுக இளைஞரணி தலைவராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு செல்கிறார். அங்கு திமுக இளைஞரணி தொண்டர்கள் இடையே அவர் பேச இருக்கிறார். உதயநிதி வருகையை ஒட்டி போஸ்டர் அடித்த திமுகவினர், அதில் “உங்கள் பெரியப்பா மு.க.அழகிரியின் கோட்டைக்குள் நுழையும் உதயநிதி அவர்களே வருக!” என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அழகிரியின் கோட்டை என்று சொல்லப்பட்டு வந்த மதுரை இனி அப்படியில்லை என்று, அழகிரியை கிண்டல் செய்ய இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதேசமயம் மற்றொரு பக்கமோ அழகிரி மேல் மரியாதை கொண்டு இன்னமும் திமுகவில் தொண்டர்கள் சிலர் இருக்கிறார்கள். மதுரை என்றுமே அழகிரியின் கோட்டைதான் என்று உணர்த்துவதற்காகவும் அவர்கள் இந்த போஸ்டரை ஒட்டியதாகவும் கூறப்படுகிறது.