1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2017 (13:52 IST)

மதுரை அலங்காநல்லூரில் விரைவில் ஜல்லிக்கட்டு? - பார்வையிட்ட கலெக்டர்

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு  அவசர சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ள நிலையில், மதுரை  அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் மற்றும் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகமெங்கும் உள்ள மாணவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமான போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
அந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்பொழுது ஜல்லிகட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அதே நேரம் தமிழக அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என பிரதமர் கூறினார். 
 
இதனால், நேற்று டெல்லியிலேயே தங்கிய ஓ.பி.எஸ், தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் கொண்டு வருவது பற்றி, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி, இன்று காலை செய்தியாலளர்களை சந்தித்து பேசிய அவர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு இன்னும் ஓரிரு நாளில் கொண்டு வரும். எனவே, மாணவர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 
 
ஆனால், ஜல்லிக்கட்டிற்காக போராடிவரும் போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அவரச சட்டத்தால் எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு வருடம் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில், நிரந்தரமான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ஜல்லிக்கட்டிற்கு பிரபலமான மதுரை அலங்காநல்லூருக்கு, மாவட்ட கலெக்டர் வீரராகராவ் தற்போது சென்றார். அங்கு வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை அவர் நேரில் பார்வையிட்டார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு தயாராகி வருகிறது எனவும், அரசின் உத்தரவின் பேரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பார்வையிட வந்ததகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பது உங்கள் விருப்பமெனில் அது விரைவில் நிறைவேறும் எனவும் அவர் கூறினார்.
 
இதன் மூலம் தமிழகத்தில் விரைவில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது எனத் தெரிகிறது.