1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2016 (06:18 IST)

”அங்கீகாரம் அளித்த கட்சியை ஜெயலலிதாவிடம் காட்டிக் கொடுத்தவர்” - கொதிக்கும் முன்னாள் மேயர்

தேர்தல் ஆதாயத்திற்காகவும், பதவி சுகத்திற்காகவும், தனக்கு அங்கீகாரம் அளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை, மறைந்த ஜெயலலிதாவிடம் காட்டிக் கொடுத்தவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் என்று திமுக முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


 

இது குறித்து மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சசிகலாவை அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டும் என்று பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததை கண்டித்து, தளபதி அவர்கள் ஆளுநர் அவர்களுக்கு புகார் அளித்தார். அந்த புகாரில் உயர்கல்வியின் ஒளி விளக்காக இருக்க வேண்டியவர்கள், இப்படி அரசியல்ரீதியாக செயல்பட்டது தவறு என்றும், அதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தளபதி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ‘தி இந்து’ ஆங்கில பத்திரிகையில் கொடுத்துள்ள பேட்டியை சுட்டிக்காட்டி, துணை வேந்தர்களின் செயல் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றே ஆளுநரிடம் தளபதி அவர்கள் தெரிவித்திருந்தார்.

ஆனால், தளபதி அவர்களின் கடித்ததை முழுமையாக படிக்காமல், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அரை வேக்காட்டுத்தனமாக விடுத்திருக்கும் அறிக்கையில், என்ன சொல்கிறோம் என்பதே தெரியாத அளவிற்கு உளறிக் கொட்டியிருக்கிறார்.

பாவம், மறைந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ஆகியோரிடமெல்லாம் அரசியல் செய்து, மறைந்த மூப்பனார் அவர்களின் உதவியில் வளர்ந்து, பிறகு அவரது பிள்ளையை நட்டாற்றில் விட்டு விட்டு, தேர்தல் ஆதாயத்திற்காகவும், பதவி சுகத்திற்காகவும், தனக்கு அங்கீகாரம் அளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை, மறைந்த ஜெயலலிதாவிடம் காட்டிக் கொடுத்தவர் அவர். அதனால் தான் நாகரிகமாக அரசியல் செய்து வரும் தளபதி அவர்களைப் பார்த்தால், அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

’காலி பெருங்காய டப்பா’ என்ற பட்டத்தைக் கொடுத்த அதிமுகவிற்கே சென்று, இன்று சசிகலாவிற்கும் விசுவாசமாக அவர் இருப்பது என்பது அவரது சொந்தப் பிரச்சினை. அதற்காக எங்கள் தளபதி அவர்களை வம்புக்கு இழுக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன்.

அதிமுகவின் உட்கட்சி விஷயங்களில் திமுக தலையிடுகிறது என்று சொல்லும் அவரிடம் நான் கேட்க விரும்புவது, அதிமுகவிற்குள் அரசியல் செய்து கொண்டிருப்பது அந்த கட்சியின் அமைச்சர்களா அல்லது திமுகவா? சசிகலாவிற்காக ஓ,பி.எஸ். முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பார் என்று சொன்னது யார்? அதிமுக அமைச்சர்கள் தானே?

சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர், 20 நாட்கள் பதவியில் இருப்பதற்குள், அவரை பதவி விலக வலியுறுத்தி, மறைந்த அம்மையார் ஜெயலலிதா சமாதியில் நின்று தீர்மானம் நிறைவேற்றி, சசிகலாவிடம் கொடுத்து, அநாகரீகமான அரசியல் செய்தது அதிமுக அமைச்சர்கள் தானே? தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு நடந்தும், அதுபற்றி இன்றுவரை வாய் திறக்காமல் இருப்பது யார்? அதிமுகவில் பதவி சுகத்தை மட்டுமே அனுபவிக்க உட்கட்சியிலேயே அரசியல் செய்யும் அமைச்சர்கள் தானே?

எங்கள் தளபதி அவர்கள், அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர். மறைந்த அம்மையார் ஜெயலலிதாவிற்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அஞ்சலி செலுத்தியவர், இன்று ‘தி இந்து’ ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூட, ”அதிமுகவின் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை”, என்று பெருந்தன்மையுடன் பதில் சொல்லி இருக்கிறார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக அமைச்சர்கள் கொடுக்கும் நெருக்கடி பற்றி இன்றைய பேட்டியில் தளபதி சுட்டிக்காட்டி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொங்கியிருக்கிறார் என்றுதான் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் அறிக்கையை படித்ததும் நினைக்கத் தோன்றுகிறது. அதிமுகவிற்குள் உள்ளபடியே அரசியல் செய்யும் சக்திகளை தட்டிக்கேட்க திராணியில்லாத எஸ்.ஆர்.பி., தளபதி மீது பாய்வது, அவரது வயதிற்கும், அரசியல் அனுபவத்திற்கும் ஏற்றதல்ல. அரசியல் இலக்கணத்தை எங்கோ மொத்தமாக குத்தகைக்கு விட்டு விட்டு தளபதி மீது அவர் விழுந்து புறாண்டுவது போல உள்ளது.

இன்றைக்கு 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக மக்கள் பணியாற்றி வரும் தளபதி அவர்கள், அதிமுகவிற்கு நேர்ந்துள்ள இந்த நெருக்கடியான நேரத்திலும், நிதானம் காக்கிறார். அவரை வீணாக சீண்ட வேண்டாம் என்று எஸ்.ஆர்.பி. அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு, இப்படி கண்மூடித்தனமாக கல்லெறிவது, அதிமுகவிற்கு எந்த வகையிலும் உதவாது என்று சுட்டிக்காட்டும் அதேவேளையில், சொந்த வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு, அடுத்த வீட்டுக்காரரிடம் அசிங்கமான அரசியல் நடத்த எஸ்.ஆர்.பி. போன்றவர்கள் துணை போக வேண்டாம்” என்று கூறியுள்ளார்.