1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2015 (14:49 IST)

உச்ச நீதிமன்ற தீர்ப்பு முதல் வெற்றி மாத்திரமல்ல, மிகப்பெரிய வெற்றி - கருணாநிதி

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முதல் வெற்றி என்பது மாத்திரமல்ல, மிகப்பெரிய வெற்றி என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.
 
திமுக தலைவர் மு.கருணாநிதி அளித்த கேள்வி பதில் பேட்டியில் கூறியதாவது,
 
செய்தியாளர்: பவானி சிங் அவர்களை அரசு வழக்கறிஞராக தமிழக அரசு நியமனம் செய்தது செல்லாது என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றியாக தாங்கள் கருதுகிறீர்களா?
 
பதில்: இதை முதல் வெற்றி என்பது மாத்திரமல்ல; மிகப் பெரிய வெற்றி என்றே சொல்லலாம்.
 
செய்தியாளர்: நீதியை நிலைநாட்டுகின்ற வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
 
பதில்: பொதுவாக நீண்ட காலமாக எதிர்பார்த்த நீதி முழுமையாகக் கிடைத்து விட்டால் நாங்கள் மேலும் மகிழ்ச்சியடைவது இயற்கை தானே?
 
செய்தியாளர்: இது பற்றிய தீர்ப்பு அடுத்த மாதம் 12ஆம் தேதிக்குள் வர வேண்டுமென்றும், மேலும் கால தாமதம் செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஜெயலலிதா தரப்பினர் கால தாமதம் செய்ய முயலுவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறதே?
 
பதில்: அப்படியொரு தகவல் உங்களுக்குக் கிடைத்திருக்கலாம். எனக்கு இப்படியொரு தகவலே கிடைக்கவில்லை.
 
செய்தியாளர்: திமுகவிற்குக் கிடைத்த முதல் வெற்றி என்று இதனை எடுத்துக் கொள்ளலாமா?
 
பதில்: திமுகவிற்கு எத்தனையோ வெற்றிகள் கிடைத்துள்ளன. எனவே இது தான் முதல் வெற்றி என்று சொல்ல முடியாது.
 
கேள்வி: இன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு 2016ஆம் ஆண்டு வர விருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
 
பதில்: நாங்கள் இப்போது ஓட்டுக் கணக்கைப் பார்க்கவில்லை. நீதி நிலைக்க வேண்டும். இன்றைக்குக் கிடைத்த தீர்ப்பை நேர்மைக்கும், நியாயத்திற்கும் கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.