வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (00:37 IST)

வண்டலூர் பஸ் நிலையம் விவகாரம் - பொய் சொன்னாலும்.... போட்டுத்தாக்கும் கருணாநிதி

பொய் சொன்னாலும், பொருத்தமா சொல்லுங்க என்று உடுமலை நாராயணக் கவிராயரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பேரவையில் 110வது விதியின் கீழ் அறிக்கை படித்தவுடன், ஏற்கனவே வேளச்சேரியிலும், மாதவரத்திலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்போவதாக தீட்டப்பட்ட திட்டங்கள் என்னவாயிற்று என்று அப்போதே நான் கேட்டிருந்தேன். அதற்கு அரசுத் தரப்பிலிருந்து பதில் வரவில்லை.
 
முதலமைச்சர் வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று 110 வது விதியின் கீழ் அறிக்கை படித்து - அந்த அறிவிப்பை அந்தப் பகுதி விவசாயிகள் எம்.ஜி.ஆரின் வாக்குறுதியை எடுத்துக் காட்டி எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்ற நிலையில் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?
 
வண்டலூரில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி புறநகர் பேருந்து நிலையம் வரப் போகிறதா? வேளச்சேரி, மாதவரம் புறநகர் பேருந்து நிலையங்களின் கதி என்ன? இதற்கான விளக்கங்களை முதல் அமைச்சர் மற்றொரு 110வது விதியின் கீழ் எப்போது படிப்பார் என்று 15-5-2013 அன்று நான் கேள்வி கேட்டிருந்தேன்.
 
எனது கேள்விக்கு இரண்டாண்டுகள் கழித்து, தற்போது, அந்தத் துறையின் அமைச்சர் வண்டலூர் பேருந்து நிலைய அறிவிப்பு பற்றி விளக்கம் அளித்துள்ளார்.  அதில், கோயம்பேட்டில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வண்டலூர் ரயில் நிலையம் அருகே 376 கோடி ரூபாய் மதிப்பில் புறநகர் பேருந்து நிலையம் ஒன்றினை அமைக்க மாநில அரசு நிர்வாக ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும், நிலத்தை அரசு வசம் எடுத்துக் கொள்வது சம்பந்தமாக நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் செவ்வாய்க்கிழமை அன்று அமைச்சர் வைத்தியலிங்கம் பேரவையில் தெரிவித்தார்.
 
பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்த அமைச்சர், ஏற்கனவே முதலமைச்சர் ஜெயலலிதா வண்டலூர் ரயில் நிலையம் அருகில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப் போவதாக அறிவித்தார் என்றும், மத்திய அரசின் நிலம் கையகப் படுத்துவதற்கான புதிய மசோதா நாடாளுமன்ற ஒப்புதலுக்காகக் காத்திருப்பது தான் வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க தாமதம் ஆகக் காரணம் என்றும் அமைச்சர் பேரவையிலே தெரிவித்தார்.
 
மேலும், அந்தப் பகுதியிலே அமைந்துள்ள நிலங்களை ஒருங்கிணைத்து ஒரு விரிவான திட்டம் தீட்டி அதிலே பேருந்து முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரவையிலே அமைச்சர் வைத்தியலிங்கம் கூறியிருக்கிறார். இவ்வாறு அமைச்சர் பேரவையில் பதில் அளித்ததாக ஒரு ஆங்கில இதழில் செய்தி வந்துள்ளது. இதன் மூலம் அமைச்சர் வைத்தியலிங்கம், முதலமைச்சர் ஜெயலலிதா நில எடுப்பிலே உள்ள பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் கருத்திலே கொள்ளாமல் 2013ஆம் ஆண்டு இந்த அறிவிப்பினைச் செய்ததாகத் தற்போது கூறுகிறாரா?
 
ஏனென்றால் அறிவிப்பை தான் செய்யவில்லை என்பதைப் போலவும் முதலமைச்சர் ஜெயலலிதா தான் அறிவித்ததாகவும் பேரவையில் பேசியதோடு மத்திய அரசின் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிலுவையில் இருப்பதுதான், இந்தப் புறநகர் பேருந்து நிலையம் வர முடியாததற்குக் காரணம் என்றும் கூறுகிறார் என்றால், ஏதோ காதிலே பூ சுற்றும் வேலை என்பார்களே, அந்த வேலையிலேதான் அமைச்சர் ஈடுபட்டிருக் கிறாரோ?
 
ஜெயலலிதா அறிவித்தது 2013ஆம் ஆண்டு. நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் தாமதமாவது 2014-2015. இந்தச் சட்டம்தான் பேருந்து நிலையம் அமைய தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்கிறார் அமைச்சர்.
 
அப்படி என்றால், பொய் சொன்னாலும், பொருத்தமா சொல்லுங்க, போக்கத்த பசங்களா என்ற உடுமலை நாராயணக் கவிராயரின் வார்த்தைகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன.
 
இது போலவே மதுரை விமான நிலையத்திற்கு அருகே துணைக்கோள் நகரம் ஒன்று 120 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப் போவதாக ஜெயலலிதா 4-4-2013 அன்று 110வது விதியின் கீழ் பேரவையில் படித்தார். அதுவாவது முடிந்துவிட்டதா என்று கேட்டிருந்தேன்.
 
அதற்கும் அமைச்சர் வைத்தியலிங்கம் பேரவையில் அளித்த பதில், “The preparation of concept and theme based layout for a Satellite township at Thoppur-Uchapatti in Madurai was under way” - அதாவது அந்தத் திட்டம் தொடக்கக் கட்டத்திலே இருக்கிறதாம். 120 கோடி ரூபாயில் எத்தனை கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது? அமைச்சர் ஏன் பேரவையிலே அதைத் தெரிவிக்கவில்லை? தெரிவிக்க முடியாது, ஏன் என்றால் செலவழித்தது, வெறும் 7 இலட்சம் ரூபாய்தான் என தெரிவித்துள்ளார்.