வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 26 ஜூன் 2015 (05:15 IST)

காதல் விவகாரம்: திருச்செங்கோடு தலித் இளைஞர் மர்ம மரணம் - போராட்டம் நடத்திய 200 பேர் கைது

திருச்செங்கோடு அருகே காதல் விவகாரத்தில் தலித் இளைஞர்  மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த சித்ரா என்பவரின் மகன் கோகுல்ராஜ். இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துள்ளார்.
 
இந்நிலையில், ஓமலூரிலிருந்து திருச்செங்கோட்டுக்கு நேற்று முன்தினம் பைக்கில் சென்ற கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. இதனால், அவரை, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேடிய போது, எங்கும் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஒரு இளைஞர் சடலம் கிடப்பதாக, ஈரோடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர் அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அது காணாமல் போன கோகுல்ராஜின் உடல் என தெரிய வந்தது.
 
இது குறித்த தகவல் கோகுல்ராஜின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த போது, அது கோகுல்ராஜ் உடல்தான் என உறுதி செய்தனர்.
 
காதல் விவகாரத்தில் தனது மகனை அடித்துக் கொன்று ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டதாக கூறி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கோகுல்ராஜ் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.


 
இந்த நிலையில், திருச்செங்கோடு அருகிலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் படிக்கும் போது, அதே கல்லூரியில் படித்த சுவாதி என்ற பெண்ணை காதலித்துள்ளார். நேற்று முன்தினம் கோகுல்ராஜ்ம் அந்த மாணவியும், திருச்செங்கோட்டுக்கு சென்றுள்ளார். பின்பு இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை 4 பேர் கும்பல் காரில் துரத்தி சென்று கோல்குல்ராஜை அடித்து உதைத்து கொலை செய்துள்ளதாக கூறி, கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்செங்கோட்டில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரியில், திவ்யா என்ற பெண்ணை இளவரசன் என்ற தலித் இளைஞர் காதலித்தார். இதனால், அவர் மர்மமான முறையில் ரயில்வே தண்டாவளத்தில் உயிரிழந்து கிடந்தார் என்து குறிப்படதக்கது.