1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (09:27 IST)

தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் - தமிழிசை சௌந்தரராஜன்

உள்ளாட்சி இடைத் தேர்தலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நடுநிலையோடு நடத்தாத மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-

“உள்ளாட்சி இடைத் தேர்தலை விதிமுறைகளுக்கு உள்பட்டு ஜனநாயக ரீதியில் நடுநிலையோடு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் வெளியூர்களைச் சேர்ந்த அதிமுகவினர் குவிந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளன. பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதிமுகவினரின் முறைகேடுகளைத் தட்டிக் கேட்ட பாஜகவினர் பல இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர். கோவையில் பாஜக மேயர் வேட்பாளர் நந்தகுமார் ஆளும்கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளார்.

அதுபோல ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள், காவல் துறையினர் துணையுடன் ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் நடந்த விதம் மிகப்பெரிய நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.

நடுநிலையோடு தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாநிலத் தேர்தல் ஆணையம் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய தேர்தல் ஆணையம் மீது பாஜக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும். அதற்கான ஆதாரங்களை பாஜக திரட்டி வருகிறது“ என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.