வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2015 (13:43 IST)

நடிகை அல்போன்சாவிடம் இருந்து தனது கணவரை மீட்டு தருமாறு பட்டதாரி பெண் பரபரப்பு புகார்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பட்டதாரி பெண் ஒருவர், தனது கணவரை கவர்ச்சி நடன நடிகை அல்போன்சாவிடம் இருந்து மீட்டு தாருங்கள் என்று பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார்.
 

 
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் சசிகலா (வயது 32 - பெயர் மாற்றப்பட்டுள்ளது). எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ள இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கண்களில் கண்ணீருடன் வந்து, பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
 
நான் சென்னையில் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படிக்கும்போது, ஜெய்சங்கர் என்பவரை காதலித்தேன். அவரும் நானும், ஒன்றாக படித்தோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் எங்கள் காதலை வெளியில் செல்லவில்லை. 8 ஆண்டுகள் எங்கள் காதல் உயிராக வளர்ந்தது. அதன்பிறகு எங்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் பச்சை கொடி காட்ட, மருதமலை முருகன் கோவிலில் எங்கள் திருமணம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் எங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. எங்கள் திருமணத்தை முறையாக பதிவும் செய்து கொண்டோம்.
 
மேலும் அடுத்த பக்கம்..

எனது கணவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். அவருடன் நான் 15 நாட்கள்தான் சேர்ந்து வாழ்ந்தேன். அதன் பிறகு அவர் துபாயில் வேலை கிடைத்து சென்று விட்டார். என்னை துபாய்க்கு அழைத்து செல்வதாக சொல்லி விட்டு சென்றார். ஆனால் அவர் என்னை அழைத்து போகவில்லை. செல்போனில் பேசினால் அழைத்து செல்வதாக சொன்னார். பின்னர் அவர் என்னுடன் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். இதனால் சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தோம். எனது கணவர் சென்னை வந்திருந்தபோது விசாரணை நடத்தினார்கள். அவர் என்னை துபாய் அழைத்து செல்வதாக போலீசாரிடம் எழுதி கொடுத்து விட்டு சென்றார். அதன்பிறகும் அவர் என்னை துபாய்க்கு அழைத்து போகவில்லை.
 
தற்போது பேஸ்புக்கில் எனது கணவர் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பதுபோல புகைப்படம் வந்தது. அந்த பெண்ணை தனது மனைவி என்றும், எனது கணவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். என் கணவருடன் இருக்கும் பெண், பிரபல சினிமா கவர்ச்சி நடன நடிகை அல்போன்சா என்று தெரிய வந்துள்ளது. அல்போன்சா எனக்கு போனில் பேசி மிரட்டுகிறார்.
 
அவர்தான் எனது கணவரை முதலில் திருமணம் செய்தாராம். இதனால் எனது கணவரை அவருக்கு விட்டு கொடுத்து விட்டு, நான் ஒதுங்கிக்கொள்ள வேண்டுமாம், இல்லாவிட்டால் என்னை தொலைத்து கட்டி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்து பேசுகிறார். எனது கணவர் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
 
எனது கணவர் எனக்கு வேண்டும். எனது 8 வருட காதல் பொய் ஆகாது. எங்கள் திருமண வரவேற்பிற்கு நடிகை அல்போன்சா வந்து வாழ்த்தி விட்டு சென்றார். அப்படியானால் எப்படி அவர், எனக்கு முன்பே எனது கணவரை திருமணம் செய்திருக்க முடியும். எனது உயிரான காதல் கணவரை நான் ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டேன். நடிகை அல்போன்சாவிடம் இருந்து எனது கணவரை மீட்டு தருவதோடு, அல்போன்சா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
 
இந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். புகார் கொடுத்த உடன், கமிஷனர் அலுவலக அதிகாரிகள் விசாரணையை தொடங்கி விட்டனர். நடிகை அல்போன்சாவின் செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுத்து பேசவில்லை.
 
இன்று(வியாழக்கிழமை) மீண்டும் விசாரணை நடக்க உள்ளது. அப்போது நடிகை அல்போன்சாவையும் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடக்க உள்ளது. புகார் கொடுத்துள்ள பட்டதாரி பெண் சசிகலாவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.