வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 2 மார்ச் 2017 (06:00 IST)

குஷ்பு பாஸ்போர்ட் விவகாரம். நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாது என்று கூறிய பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.




குஷ்புவின் பாஸ்போர்ட் 2022ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் நிலையில் உள்ளது. ஆனால் அடிக்கடி வெளிநாடு சென்றதால் அதில் உள்ள பக்கங்கள் நிரம்பியிருந்தது. இதனால் உள்தாள் ஒட்டி பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரும்படி அவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்

ஆனால் குஷ்பு மீது கடந்த சட்டசபை தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாது என்று பாஸ்போர்ட் அதிகாரி மறுத்துள்ளார்.

இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என குற்றஞ்சாட்டிய குஷ்பு இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 1993-இல் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை சில நிபந்தனைகளின் அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாது என மறுக்க முடியாது. இதை சட்டப்படி ஏற்க முடியாது. ஆகையால் நடிகை குஷ்புவின் பாஸ்போர்ட்டை மண்டல அதிகாரி புதுப்பித்து வழங்க வேண்டும்.

அதேசமயம், புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை பெற்ற பின், வெளிநாடு செல்லும் போது, எந்த நாட்டுக்கு செல்கிறார், எப்போது நாடு திரும்புவார் என்பன உள்ளிட்ட விவரங்களை, நடிகை குஷ்பு, தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனால் குஷ்புவின் பாஸ்போர்ட் பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.