வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (12:55 IST)

கும்பகோணம் தீ விபத்து வழக்கு: தீர்ப்பு வேதனையளிக்கிறது - பெற்றோர் குமுறல்

கும்பகோணம் தீ விபத்து வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமும் வேதனையும் அளிப்பதாக, உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர்.
 
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 21 பேரில் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி முகமது அலி, இந்த வழக்கில் இருந்து 11 பேர் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.
 
தீர்ப்பு குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில்: "எங்கள் குழந்தைகள் அடைந்த சித்திரவதைக்கு தகுந்த நீதி கிடைக்கவில்லை. 11 பேரை விடுவிக்க ஏன் 10 ஆண்டுகள் நாங்கள் காத்திருக்க வேண்டும்” என தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
 
மற்றொரு பெற்றோர் ஒருவர் கூறுகையில்: "சம்பவம் நடந்தபோது பள்ளியில் இருந்த ஆசிரியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 94 குழந்தைகள் இறந்தபோது, ஆசிரியர்கள் மட்டும் எப்படி எந்த காயமும் இன்றி தப்பினர். அவர்கள் குழந்தைகளை மீட்க முயற்சிக்கவில்லை. பொறுப்பற்ற ஆசிரியர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது" என்றார்.
 
தீர்ப்பு அளித்த அதிருப்தியின் உச்சத்தில் இருந்த மற்றொரு பெற்றோர், "முதலில் இந்த வழக்கில் 3 பேரை விடுவித்தனர். இன்று 11 பேரை விடுவித்துள்ளனர். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக குற்றவாளிகளை விடுவிப்பதை காட்டிலும் மொத்தமான அனைவரையும் விடுவித்துவிடுங்கள். குழந்தைகளை இழந்த நாங்கள் இவர்களுக்கு பதிலாக சிறை தண்டனையையும் சேர்த்து அனுபவித்துக் கொள்கிறோம்" என அழுதார்.