வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (18:59 IST)

நடுரோட்டில் மயங்கி விழுந்த முதியவரை காப்பாற்றிய கலெக்டர்!!

குளித்தலையில் வேளாண்மை துறை சார்ந்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கரூர்  மாவட்ட ஆட்சியர் சென்று கொண்டிருக்கும் போது குளித்தலை டோல்கேட் சாலையின் நடுவே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்தார். அவரைத்தூக்க அப்பகுதியில் இருந்த போக்குவரத்துக் காவலர் முயன்றுகொண்டிருந்தார்.
 

இதைப் பார்த்த மாவட்ட ஆட்சித் தலைவர் தனது வாகனத்தை நிறுத்தி   போக்குவரத்து காவலருடன்  இணைந்து அந்த முதியவரை தூக்கிச் சென்று அருகில் இருந்த டீக்கடையில் அமர வைத்து அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். 
பின்னர் 108 அவசர ஊர்திக்கு தனது அலைபேசியில் இருந்து அழைத்து வரவழைத்த மாவட்ட ஆட்சியர் குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்து, மருத்துவரை  போனில் தொடர்புகொண்டு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.  போக்குவரத்துக் காவலரையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

மேலும் சம்பந்தப்பட்ட  முதியவரின் குடும்ப நிலை குறித்து ஆய்வு செய்து தகவல் தெரிவிக்குமாறு குளித்தலை வட்டாட்சியருக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் தகுதி இருக்கும் பட்சத்தில் அவருக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மனித நேயமிக்க இந்த செயலை அப்பகுதி மக்கள் மனதாரப்பாராட்டினர்.