கொளுத்தும் வெயிலில் மாணவர்கள் : தாமதமாக வந்த கலெக்டர்
கொளுத்தும் வெயிலில் மாணவர்கள் : தாமதமாக வந்த கலெக்டர்
சர்வதேச பேரிடர் தணிக்கும் நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து காத்துக் கொள்வது குறித்தும், பேரிடர்களை எவ்வாறு குறைப்பது என்பது குறித்தும் இந்த நாளில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக அளவில் ஆங்காங்கே இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு செயல்முறை செய்து காண்பிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (13-ம் தேதி) நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலையே பேரணி துவக்கப்பட்டு வந்த நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் 3 மணியளவில் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் அங்கு சுமார் 2 மணி முதலே வந்து அமர்ந்து காத்திருந்தனர். ஆசிரியர்கள், ஆசிரியைகள் நிழலுக்கு மரத்தை தேடியும், அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை நிர்வாகத்தினர் அரசு அலுவலகங்களில் தஞ்சம் புகுந்தும், நிழலுக்கு காத்திருந்தனர்.
ஆனால் அப்பாவி மாணவச் செல்வங்களோ, கொளுத்தும் வெயிலில் வெறும் தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியரின் வருகைக்காக காத்திருந்தனர்.
ஆனால் சரியாக 3.50 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வரும் வரை கையில் முதல்வர் முத்திரை பதித்த பதாகைகளை ஏங்கியவாறே சின்னஞ்சிறு மாணவிகள் பிடித்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
கரூர் செய்தி சி.ஆனந்தகுமார்