1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 16 மே 2019 (07:11 IST)

6ஆம் வகுப்பு மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த கலெக்டர்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்  6ஆம் வகுப்பு தேர்வில் எதிர்காலத்தில் யாராக ஆசை? என்ற வினா மாணவ, மாணவியர்களுக்கு கேட்கப்பட்டிருந்தது. மாணவர்கள் பலர் டாக்டர், எஞ்சினியர், நடிகர், அரசியல்வாதி என பலவிதமான பதில்களை அளித்திருந்தனர்.
 
ஆனால் இந்த வினாவிற்கு அந்த பள்ளியின் மாணவி மனோபிரியா என்பவர் நான் எதிர்காலத்தில் கலெக்டர் ஆக விரும்புகிறேன் என்றும், என்னுடைய முன் மாதிரி தற்போதைய கரூர் கலெக்டர் அன்பழகன் என்றும் பதில் எழுதியிருந்தார்.
 
இந்த மாணவியின் பதில் குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் அவர்களுக்கு தெரிய வந்ததும் உடனே அந்த மாணவியை அழைத்து தன் இருக்கையில் சிறிது நேரம் அமர வைத்து அழகு பார்த்து அவருக்கு பாராட்டும் தெரிவித்தார். அப்போது அந்த மாணவியின் சக மாணவ, மாணவர்களும் ஆசிரியர்களும் உடனிருந்தனர். அவர்கள் அனைவரும் கரூர் கலெக்டருக்கு நன்றி கூறினர். 
 
அந்த மாணவியிடம் மட்டுமின்றி அனைத்து மாணவர்களிடமும், நன்றாக படித்தால் நிச்சயம் தன்னைப்போல் கலெக்டர் ஆகிவிடலாம் என்று அன்பழகன் அவர்கள் அறிவுரை கூறியிருந்தார். அவருடைய இந்த ஊக்கம் நிச்சயம் மாணவர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும் என்றும் இவர்களில் சிலர் எதிர்கால கலெக்டர் ஆவது நிச்சயம் என்று ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.