திருச்சி சிவா மனைவி மரணம்: கருணாநிதி இரங்கல்
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மனைவி தேவிகாராணியின் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவின் துணைவியார் தேவிகாராணி சனிக்கிழமை (ஆக. 2) மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
கடந்த சில மாதங்களாக நோயினால் தாக்குண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியபோது, கண்ணீருடன் அந்தச் செய்தியை என்னிடம் திருச்சி சிவா தெரிவித்தார்.
மேலும் ஒரு சில மாதங்களாவது அவர் உடல் நலத்தோடு இருப்பார் என்று எண்ணியதற்கு மாறாக அவர் மறைந்து விட்ட செய்திதான் கிடைத்தது.
மனைவியை இழந்து வாடும் சிவாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கருணாநிதி கூறியுள்ளார்.