வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (15:06 IST)

யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் – கூப்பிட்டு சீட் கொடுக்கும் கமல் !

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இல்லாதவர்களும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம் என மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் திமுக மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகளின் கீழ் அணிதிரண்டு வருகின்றன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகியக் கட்சிகள் மட்டும் தனித்துப் போட்டியென அறிவித்துள்ளன.

இந்நிலையில் திமுக, அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய பெரியக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சி உறுப்பினர்களை விருப்பமனுப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளன. அது போல மக்கள் நீதி மய்யம் சார்பிலும் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மற்றக் கட்சிகளைப் போலல்லாமல் மக்கள் நீதி மய்யத்தில் அந்தக் கட்சியில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கூட விருப்பமனுப் பெற்றுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக் கமலின் ஆதரவாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டாலும் தமிழக அரசியலில் கமலின் மீதான விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது.

விருப்பமனு வாங்கும் அளவுக்குக் கூட கட்சியில் உறுப்பினர்கள் இல்லையா என்று கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் இதுதொடர்பாகக் கமல் அளித்துள்ள விளக்கத்தில் ‘விருப்ப மனு வாங்குவதில் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் மட்டுமே பங்கு கொள்ளலாம் என்றில்லை. மக்களும் பங்குகொள்ள வேண்டும். தங்கள் வட்டாரத்தில் அல்லது மாவட்டத்தில் எம்.பி.யாக வர சிறப்பான தகுதியுடைவர் என்று எவரைக் கருதுகிறார்களோ அவரை பரிந்துரைக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.