வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (13:12 IST)

நீதிக்கட்சி திராவிட இயக்கங்களின் தாய்: ஏ.சி.சண்முகம்

நீதிக்கட்சி திராவிட இயக்கங்களின் தாய் என்றும் அக்கட்சியின் நூற்றாண்டு விழா, ஓராண்டு கொண்டாடப்படும் என்றும் புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
நீதிக்கட்சி திராவிட இயக்கங்களின் தாய் அமைப்பாகும். தென்னிந்திய நல உரிமை சங்கம் என்று முதலில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு, பின்னாளில் நீதிக்கட்சி என்கிற ஜஸ்டிஸ் கட்சி என அழைக்கப்பட்டது.
 
நீதிக்கட்சி தொடங்கி, இன்றைய தினம் நூற்றாண்டு விழா காண்கின்றது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆகிய பிரிவினரை கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல் ரீதியாக முன்னேற்றுவது, அவர்களின் சமூக நலனை பாதுகாப்பது உள்பட பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக நீதிக்கட்சி உருவாக்கப்பட்டது.
 
சென்னை மாகாணத்தின் ஆட்சி காலத்திலும், நீதிக்கட்சி தங்களின் சிறப்பான ஆட்சி திறத்தால் மக்களுக்கு பல நன்மைகளை செய்தது.
 
நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழா, அக்கட்சியின் பெயரை தன்னகத்தே கொண்டுள்ள புதிய நீதிக்கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஓராண்டு காலம் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதையும், சென்னை மாவட்டத்தின் சார்பில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி சென்னையில் நீதிக்கட்சி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.