வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : செவ்வாய், 15 ஜூலை 2014 (15:20 IST)

10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட 8 புதிய திட்டங்கள் - விதி 110இன் கீழ் ஜெயலலிதா அறிவிப்பு

10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட பல்லாயிரம் கோடி மதிப்பிலான எட்டு புதிய கட்டுமானத் திட்டங்களைத் தமிழகச் சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விதி 110இன் கீழ் அறிவித்தார். அவரது உரை வருமாறு:
 
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 
 
வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் நகர்மயம் ஆக்கல் ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு, மக்களின் மகிழ்வான, வளமான, நலமான வாழ்க்கைக்கு வேண்டிய அத்தியாவசியத் தேவைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் வீட்டு வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதிலும், அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி, சாலை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 
 
கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பிலும்; தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பிலும்; பல்வேறு குடியிருப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு, ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மக்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
 
இதன் தொடர்ச்சியாக, கீழ்க்காணும் திட்டங்களைச் செயல்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. 
 
1. திருச்சி மாவட்டம், நாவல்பட்டில், திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலை இணையும் பகுதியில் அமைந்துள்ள 68.82 ஏக்கர் நிலப் பரப்பில், 20 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய 1,360 பல்வேறு வகை மனைகள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக 690 மனைகளும், மத்திய வருவாய் பிரிவினருக்காக 475 மனைகளும், உயர் வருவாய் பிரிவினருக்காக 195 மனைகளும் உருவாக்கப்படும். 
 
2. தொலைநோக்குத் திட்டம்-2023-ஐ நிறைவேற்றும் முகத்தான், மைய மற்றும் மாநில அரசுகளின் குடிசைப் பகுதிகள் அற்ற நகரங்கள் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் சென்னை மற்றும் இதர நகரங்களில் 825 கோடி ரூபாய் செலவில் 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதில், மைய அரசின் பங்கு 50 விழுக்காடாகவும், மாநில அரசின் பங்கு 40 விழுக்காடாகவும், பயனாளிகளின் பங்கு வீட்டுக் கட்டுமானச் செலவில் மட்டும் 10 விழுக்காடாகவும் இருக்கும். கடந்த ஆண்டு எனது உத்தரவின்படி கட்டடப் பரப்பு 397 சதுர அடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது கட்டப்பட உள்ள குடியிருப்பின் கட்டுமானப் பரப்பு 400 சதுர அடியாக இருக்கும். மேலும், மின் விசிறிகள், மின் விளக்குகள் ஆகியவை பொருத்திக் கொடுக்கப்படும். இது தவிர, அடிப்படை வசதிகளான சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்று அமைப்புகள் மற்றும் சமூக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். 
 
3. 1972ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தினால் நொச்சிக்குப்பம் பகுதியில் கட்டப்பட்ட 534 குடியிருப்புகள் மிகவும் சிதிலமைடந்து இருப்பதாகவும், அவற்றை மீண்டும் கட்டித் தருமாறும் அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கையினை ஏற்று, நொச்சிக்குப்பம் திட்டப் பகுதியில் 534 அடுக்குமாடிக் குடியிருப்புகளை 48 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் மாநில நிதியுதவியின் கீழ் கட்ட நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு குடியிருப்பும், 400 சதுர அடி கட்டட பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, பால்கனி, குளியலறை, கழிப்பறை வசதிகளுடன், மின்சார விசிறி மற்றும் மின்சார விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும். இக்குடியிருப்புகளுக்குத் தெரு மின் விளக்குகள், குழாய் மூலம் குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்று வசதிகள் அமைக்கப்படும். நியாய விலைக் கடைகள், பாலர் பள்ளிகள் போன்ற சமூக உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். கடலோரப் பகுதிகளுக்கான ஒழுங்குமுறை விதிகளின் படி ஒப்புதல், கலங்கரை விளக்க ஆணைக் குழுவின் ஒப்புதல் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் ஒப்புதல் ஆகியவை பெறப்பட்ட பின் இந்தக் குடியிருப்புகள் கட்டப்படும். 
 
இக்குடியிருப்புகளில் வாழும் குடும்பங்கள் தங்களது விரிவாக்கப்பட்ட குடும்பங்களுக்கும் குடியிருப்புகள் கோரியதால் இக்குடியிருப்புகளை மீண்டும் கட்டும் பணிகளைக் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ள இயலவில்லை. இந்தக் குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற குடும்பங்களுக்கு மட்டும் இந்தப் பகுதியில் கட்டப்பட உள்ள புதிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு அளிக்கப்படும். இவர்களது விரிவடைந்த குடும்பங்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கம் திட்டப் பகுதியில் குடியிருப்புகள் வழங்கப்படும்.

4. மாநிலத்தின் செழுமையான பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்க இதுகாறும் 64 நகரங்கள் புராதன நகரங்கள் என அரசால் அறிவிப்புச் செய்யப்பட்டு உள்ளன. இந்தப் புராதன நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னர் ஒவ்வொரு புராதன நகரத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான மானியத் தொகை 2012-2013ஆம் ஆண்டில் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 64 புராதன நகரங்களில் 60 புராதன நகரங்களுக்கு இதுகாறும் 16 கோடியே 82 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள புராதன நகரங்களான திருப்பரங்குன்றம், திருவட்டாறு, சுசீந்திரம் மற்றும் கொடுமுடி ஆகிய நகரங்களில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக தலா ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல், திருமுருகன்பூண்டி, கழுகு மலை, சுவாமி மலை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திருப்புனவாசல் மற்றும் திருபுவனம் ஆகிய ஆறு நகரங்கள் புராதன நகரங்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். மொத்தத்தில், இந்த 10 நகரங்களுக்கும் 10 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
 
5. சென்னைப் பெருநகரப் பகுதிக்கான முதலாம் முழுமைத் திட்டத்தில் மறைமலை நகர் புதுநகர் திட்டம் ஒரு புதிய நகரமாகச் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் உருவாக்கப்பட்டு, 1,915 ஏக்கர் பரப்பளவில் பல கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. 
 
மறைமலை நகரைச் சுற்றியுள்ள பகுதியில் பெருகி வரும் வீட்டு மனைத் தேவையைக் கருத்தில் கொண்டு, கடம்பூர் கிராமத்தில் உள்ள 222 ஏக்கர் நிலப்பரப்பை  அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தன்னிறைவு பெற்ற குடியிருப்புப் பகுதியாக மாற்றி அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
 
இத்திட்டத்தின் கீழ், திறந்த வெளியிடம், பொது உபயோகப் பகுதிகள் மற்றும் சாலைப் பகுதிகளுடன் கூடிய உயர் தர வருவாய் பிரிவு, நடுத்தர வருவாய் பிரிவு, குறைந்த வருவாய் பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த வருவாய் பிரிவு ஆகியோருக்கான குடியிருப்பு மனைகள் உருவாக்கப்படும். கடம்பூர் கிராமத்தில் 58 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு பெரிய ஏரியை நீர் நிலையாகவே நிலை நிறுத்தி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொழுது போக்கு வசதிகளை அபிவிருத்தி செய்து, சுற்றுச் சூழல் சமன்படுத்தப்படும். 
 
6. கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 63 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் பல அடுக்குமாடி அலுவலகக் கட்டடம் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கட்டடம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 840 சதுர அடி பரப்பளவில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று அடித்தளங்கள் + தொகுப்பு + 8 மாடிகளைக் கொண்ட கட்டடமாக, அதாவது 3 basement floors + Stilt floor + 8 floors கொண்ட கட்டடமாக அமையும். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்கு இந்தக் கட்டடம் பயன்படும்.

7. சென்னைப் பெருநகரப் பகுதியில் போக்குவரத்து அமைப்பினை மேம்படுத்தி நீடித்த நிலையான கட்டமைப்பினை அமைக்க உலக வங்கி நிதி உதவியுடன், மூன்றாம் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெருகி வரும் வாகன போக்குவரத்தினால் 
பல்லாயிரக்கணக்கான பாதசாரிகள் சாலையினை பாதுகாப்பாகவும், எளிதாகவும் கடக்க, மேற்கண்ட ஆய்வில் பல சுரங்க நடைபாதைகள் தேவை எனக் கண்டறியப்பட்டது. அவ்வாறு கண்டறியப்பட்ட சுரங்க நடைபாதைகளில், காமராஜ் சாலையில் காந்தி சிலை அருகில்; புரசைவாக்கத்தில் கங்காதீஸ்வரர் கோவில் தெரு; அயனாவரம் - கொன்னூர் நெடுஞ்சாலை; வடபழனி – என். எஸ். கே. சாலை; கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி சாலை; அரும்பாக்கம் உள்வட்டச் சாலையில் உள்ள மெட்ரோ இரயில் நிலையம் அருகில்; ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஆலந்தூர் என மொத்தம் ஏழு இடங்களில் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சுரங்க நடைபாதைகள், அடிப்படைக் கட்டமைப்பு நிதி அளிப்புடன் சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளுடன் கலந்தாலோசித்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் முன்னுரிமை அடிப்படையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும். 
 
8. இரண்டாவது பெருந்திரள் துரித இரயில் திட்டம், இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் தென்னக ரயில்வேயின் பெருநகர போக்குவரத்து ரயில் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டது. இரண்டாவது பெருந்திரள் துரித இரயில் திட்டத்தில், மந்தைவெளி, கிரீன்வேஸ் ரோடு, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி மற்றும் வேளச்சேரி ஆகிய ஒன்பது ரயில் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும், முடிக்கப்பட வேண்டிய சில இறுதிப் பணிகளுடன் இயங்கி வருகின்றன. இந்தத் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கும் போதே, தமிழக அரசானது இரண்டாவது பெருந்திரள் துரித ரயில் திட்டத்தில் அமைந்துள்ள ரயில் நிலையங்களின் மேல் உள்ள திறந்த வெளியினை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தத் திட்டம் தீட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. 
 
இதன்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உரிய கலந்தாய்வாளர்களையும், கட்டடக் கலை வல்லுநர்களையும், வணிக கட்டடங்களைத் திட்டமிடுவதற்காக நியமித்தது. ஓவ்வொரு ரயில் நிலையத்திலும் கலை நுணுக்கத்துடன் மேலும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட பிரத்யேக வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் கொண்ட வணிக வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி துரித ரயில் நிலையத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள வணிகப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான ஒப்பந்த ஆவணங்கள் உள்ளடக்கிய விரிவான சாத்தியக்கூறு அறிக்கை கலந்தாலோசகர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், வேளச்சேரி ரயில் நிலையத்தின் மேல் அலுவலக வளாகம் அமைப்பதற்கான, சாத்தியக்கூறு இருப்பதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரையின்படி, வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தின் மேல் 1 லட்சத்து 11 ஆயிரம் சதுர அடி பரப்பில், இரண்டு தளம் கொண்ட அலுவலக வளாகம் சுமார் 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
 
எனது தலைமையிலான இந்த அரசின் நடவடிக்கைகள் மூலம், அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதி, அரசு அலுவலகங்களின் அலுவலக வசதி மற்றும் போக்குவரத்து வசதிக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொண்டு அமைகிறேன். 
 
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, சட்டப் பேரவையில் அறிவித்தார்.