வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Updated : வியாழன், 26 மே 2016 (09:51 IST)

ஜெயலலிதாவின் அரசியல் ஆட்டம் ஆரம்பம் - ஜி.கே.வாசனுக்கு செக்

ஜெயலலிதாவின் அரசியல் ஆட்டம் ஆரம்பம் - ஜி.கே.வாசனுக்கு செக்

ராஜ்யசபா எம்பி தேர்தலில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு பதவி வழங்கியதன் மூலம் ஜி.கே.வாசனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ரீதியாக செக் வைத்துள்ளதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது.
 

 
ராஜ்யசபாவில், தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக  நவநீதி கிருஷ்ணன், ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் கட்சி சார்பில் சுதர்சன நாச்சியப்பன், திமுக சார்பில் கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு ஆகியோர்  பதவி காலம் முடிவடைய உள்ளது.
 
ராஜ்யசபாவில் நான்கு பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், ஓரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வைத்தியலிங்கம், தாமகாவில் இருந்து வெளியேறிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஏ.விஜயகுமார் ஆகியோரை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தமாகா தலைமையும், அக்கட்சி தொண்டர்களும் மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால், சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக - தமாகா இயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
 
இதனால், கடைசி நேரத்தில், அதிமுக கூட்டணிக்கு டாட்டா காட்டிவிட்டு, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் ஜி.கே.வாசன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  தமாகா மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் கட்சிக்கும், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அதிமுகவிலும் இணைந்தனர். இவர்களைப் போலவே பலரும் பல்வேறு கட்சியில் இனைந்தனர்.
 
இந்த நிலையில், தமாகாவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு, யாரும் எதிர்பாரத வகையில், ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தார் ஜெயலலிதா. இதன்மூலம், ஜி.கே.வாசனுக்கு ஜெயலலிதா அரசியல் ரீதியாக செக் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
வரும் காலத்தில், தமாகாவில் இருந்து மட்டும் அல்ல, திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக என எந்த கட்சியில் இருந்தும் அதிமுகவிற்கு வருபவர்களுக்கு உயர்ந்த பதவி காத்துள்ளது என்பதை தெரிவிக்கும் விதமகாவே இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாம்.