வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2016 (15:30 IST)

அன்புமணியை குறிவைக்கும் ஜெயலலிதா: சவால் விடும் பாமக!

பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணியை இந்த தேர்தலில் மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


 
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி வெற்றி பெற்றார். அவர் இப்போது பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஊர், ஊராக அதிமுகவையும், ஜெயலலிதாவையும் விமர்சித்து வருகிறார்.
 
நாடாளுமன்ற தேர்தலிலேயே அன்புமணியை தோற்கடித்திருக்க வேண்டும், அவரை அப்போது விட்டு வைத்ததால் தான் தற்போது தனக்கே போட்டியாக வருகிறார் என அதிமுக தலைமை நினைக்கிறதாம்.
 
இதனால் தான் அன்புமணியை எதிர்த்து தர்மபுரி தொகுதியில் பாமகவில் இருந்து, அதிமுகவில் சேர்ந்த பு.தா.இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால் தற்போது அன்புமணி பென்னாகரம் தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
உளவுத்துறை மூலம் இந்த செய்தியை தெரிந்து கொண்ட அதிமுக தலைமை வேப்பனப்பள்ளி தொகுதியின் வேட்பாளர் கே.பி.முனுசாமியை பென்னாகரம் தொகுதிக்கு மாற்றினார்.
 
கே.பி.முனுசாமி வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். அவருக்கு பென்னாகரத்தில் கனிசமான செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. அன்புமணி பென்னாகரத்தில் களம் இறங்கினால் அவருக்கு கே.பி.முனுசாமி கடுமையாக நெருக்கடி கொடுப்பார் என்பதாலே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதற்கு பதில் அளித்த பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் சரவணன், கே.பி.முனுசாமியெல்லாம் அன்புமணிக்கு போட்டியா?. ஜெயலலிதாவே அன்புமணியை எதிர்த்து போட்டியிட்டால் ஜெயிக்க முடியாது என சவால் விடுத்தார்.