1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 29 ஜூன் 2017 (09:29 IST)

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: சர்ச்சைகளை ஏற்படுத்துமா?

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: சர்ச்சைகளை ஏற்படுத்துமா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவையை கூட்டி ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடி ரூபாய்க்கு நினைவு மண்டபம் அமைப்பது உள்ளிட்ட சில தீர்மானங்களை நிறைவேற்றினார்.
 
அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பின்னர் அதுபற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டவர். அவருக்கு அரசு சார்பில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
 
குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை அரசு விளம்பரத்தில் பயன்படுத்தியது நீதிமன்ற அவமதிப்பு என்றும், அவரது பிறந்த நாளை தமிழக அரசு கொண்டாடுவது கேளிக்கூத்து என்றும் பாமக கூறியிருந்தது. இந்நிலையில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு நினைவு மண்டபம் கட்டுவது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.