வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Lenin
Last Updated : சனி, 18 அக்டோபர் 2014 (12:15 IST)

விடுதலையாகிறார் ஜெயலலிதா - தொண்டர்கள் ஆரவாரம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 
 
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் நேற்று (17.10.14) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைத்தது. 
 
அதன்படி இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலைப் பெற்றுக்கொண்ட பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அவர்களுக்கு ஜாமின் வழங்கினார். ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் 8 பேர் தலா 1 கோடி ஜாமின் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
 
முன்னதாக, பெங்களூரில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் 2014 செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அன்றே 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, கடந்த 7ஆம் தேதி ஜாமீன் மனுக்களை நிராகரித்தார். இதையடுத்து, ஜெயலலிதா சார்பில் 9ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று (17.10.14) விசாரணைக்கு வந்தது.
 
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோக்கூர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
 
உச்சநீதிமன்றப் பதிவாளரிடமிருந்து உத்தரவின் நகல், கர்நாடகத்தின் பரப்பன அக்ரஹார சிறைச்சாலைக்குச் சென்றடைந்த பிறகு, ஜெயலலிதாவிற்கு ஜாமின் வழங்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 21 நாள்களாக சிறையில் இருக்கும் ஜெயலலிதா, இன்று விடுதலையாகிறார்.