செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2016 (13:44 IST)

ஜெயலலிதா சமாதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!!

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி, சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் ஆன நிலையில், நேற்று முன் தினம் காலமானார். அவரது உடல் ராஜாஜி மஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

 
நேற்று முன்தினம் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் வந்திருந்தனர். ஆனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் பெரும்பாலானவர்களால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதையடுத்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர்கள் மெரினா கடற்கரையிலேயே இரவு தங்கினர்.
 
பல்வேறு ஊர்களில் இருந்து அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும் பஸ்கள், வேன்கள், கார்கள், ரெயில்கள் மூலம் அலை, அலையாய் சென்னைக்கு நேற்று திரண்டு வந்தனர். நேரம் செல்லச் செல்ல ஜெயலலிதா சமாதி முழுவதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது.
 
அஞ்சலி செலுத்துவதற்கு வந்தவர்கள் பூக்கள், மாலைகளை அவரது சமாதியில் தூவினர். இதன் காரணமாக அவரது சமாதியின் மேல் மலை போன்று பூக்களும், மாலைகளும் குவிய தொடங்கின. இதையடுத்து பெண் ஊழியர்கள் அவ்வப்போது அவரது சமாதியில் போடப்பட்ட பூக்கள், மாலைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
 
இதனை தொடர்ந்து ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்த வந்ததால் மெரினா கடற்கரை சாலை நேற்று பரபரப்புடன் இருந்தது. பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அங்கு வரும் மக்களுக்கு அதிமுக-வின் சார்பில் உண்வ பொட்டலங்களும், தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டு வருகிறது.