வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 23 நவம்பர் 2014 (15:35 IST)

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நடந்த வினோத நிகழ்வுகள்: கருணாநிதி அறிக்கை

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நடந்த வினோத நிகழ்வுகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
ஜெயலலிதா தரப்பினர் மீது பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது, அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.வி.ஆச்சார்யா தனது வாழ்க்கைப் பயணத்தை. அனைத்தும் நினைவுகளிலிருந்து என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் நூல் எழுதி இருக்கிறார்.
 
33 அத்தியாயங்களும், 336 பக்கங்களும் கொண்ட இந்த ஆங்கில நூலில், 25 ஆம் அத்தியாயம் 206ஆம் பக்கம் முதல் 220ஆம் பக்கம் வரை, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த வரும், கர்நாடக மாநில அரசின் தலைமை  வழக்கறிஞராக 5 முறை பணிபுரிந்தவருமான மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா இந்த வழக்கில் ஆஜரான போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி அவரே நேரடியாகச் சொல்வதைப்போல எழுதியிருக்கிறார்.
 
இந்த நூலில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி அவர் எழுதியுள்ள முக்கியமான குறிப்புகளை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
 
ஜெயலலிதா 16.5.2011ல் முதல்வராகப் பதவி ஏற்றதற்குப் பிறகு, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை என்னிடமும், அரசுத் தரப்பு வழக்கு குறித்தும் தன்னுடைய அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றிக் கொண்டது.
 
அந்தத் துறை, குற்றவியல் நடை முறைச் சட்டம் 173(8) பிரிவின்படி வழக்கில் தொடர்ந்து மேலும் புலன் விசாரணை செய்யவும், உயர் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கெனத் தனியே வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொள்ளவும் முடிவு செய்தது.
 
இந்த பிரச்னைகள் குறித்தும் எனக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. வழக்கில் தொடர்ந்து புலன் விசாரணை செய்வதற்கு சட்டத்தின் அடிப்படையில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். நான் மேற்கொண்ட நிலைப்பாடு சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
குற்றம் சாட்டப்பட்டோருக்கு என்னால் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக ஜெயலலிதா ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். அந்த ஆதிக்க சக்தியினர், தனி வழக்கறிஞர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு விடாப்பிடியாக முயற்சி செய்தனர். 
 
நான் அரசுத் தரப்பு தனி வழக்கறிஞராகவும், அரசின் தலைமை வழக்கறிஞராகவும் பதவிகள் வகித்து வந்த காரணத்தால், ஒரே நபர் 2 பதவிகள் வகிக்கக் கூடாது என்று காரணம் காட்டி, அரசுத் தரப்பு தனி வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகிவிட வேண்டுமென்று என்னைக் கட்டாயப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 
 
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், அதன் மூலம் என்னை அரசுத் தரப்பு தனி வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலக்கி விடலாம் என்ற நம்பிக்கையோடு, நான் தலைவராக இருந்த பி.எம்.எஸ். கல்வி அறக்கட்டளையில் முறைகேடுகள் நடந்ததாகச் சொல்லி, அவற்றின் மீது சிபிஐ விசாரணை கோரி 2 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 
இந்த 2 ரிட் மனுக்க ளையும் உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்திலிருந்தோ அல்லது ஆளுநரிடமிருந்தோ அவர்கள் விரும்பியதை அடைவதில் தோற்றுப் போனதற்குப் பிறகு, எண்ணியதை முடிக்க அரசியல் ரீதியான அழுத்தம் தரப்பட்டது. நான் 2 பதவிகளை வகித்து வந்ததால், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகும்படி என்னைக் கேட்டுக் கொள்ள மாநில அரசுக்கு 
பாஜக மேலிடம் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
 
ஆதிக்க சக்தியின் குழுவைச் சேர்ந்த ஒருவர், நான் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்பை உடனடியாக ராஜினாமா செய்யாவிட்டால், எனக்கு எதிராகப் புகார் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று என்னிடம் தெரிவித்தார். 
 
எனக்கு எதிராகப் புலன் விசாரணை நடத்துவதற்கான நீதிமன்ற ஆணை மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு சட்டத்துறையில் 56 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பழுக்கற்ற பணி புரிந்து கொண்டிருப்பவன் என்ற எனது புகழுக்குக் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று 
எனக்குத் தோன்றியது. அந்த ஆதிக்க சக்தியினர் பிரயோகிக்கும் கடைசி ஆயுதம் இது வாகத்தான் இருக்கும் என்று எனக்குப்பட்டது. 
 
எனவே, நான் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகி விடுவதென்றும்; என் மீது கொடுக்கப்பட்ட புகாரிலிருந்து நான் நிரபராதி என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பு விலகுவதில்லை என்றும் முடிவெடுத்தேன். 
 
எனக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து கொண்டிருந்த போது, நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அனைத்துத் தரப்பினரிடமும் விரிவான விசாரணை மேற்கொண்டதற்குப் பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றம், தனியார் கொடுத்த புகார் மனுவைத் தள்ளுபடி செய்தும், எனக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை ரத்து செய்தும் ஆணையிட்டது. அதன் பிறகு, 13.8.2012ல் நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை அரசிடம் ஒப்படைத்தேன்.
 
இறுதியாக 17.1.2013ல் என்னுடைய ராஜினாமா மாநில அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் எனக்கு இருந்த தொடர்பு முடிவுக்கு வந்தது.
 
என்னுடைய சட்டத்துறை வாழ்க்கையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றாமல் போனது இந்த ஒரே ஒரு நிகழ்வில் 
மட்டும்தான். இந்த வழக்கில் நான் சந்தித்த பல்வேறு தடைகளை விளக்கிப் பட்டியலிட்டிருக்கிறேன்.
 
வாய்தாக்களை எப்படி வெற்றிகரமாகப் பெற முடியும் என்பதற்குத் தேவையான பல்வேறு வகைப்பட்ட புதுமையான அடிப் படைகளை, இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நான் ஆஜரானதன் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒத்திவைத்தல் அல்லது வாய்தாச் 
சட்டம் என்ற பொருளை மையமாக வைத்து ஒரு நூலை என்னால் எழுத முடியும். எனினும், குற்றவாளி யாராவது விசாரணையைத் தொடர்ந்து இழுத் தடிக்கும் நோக்கில் என்னுடைய நூலைப் பயன் படுத்திக் கொள்ளக்கூடாது என்பதால் அவ்வாறு நூல் எழுத நான் 
விரும்பவில்லை.
 
இவ்வாறு பி.வி.ஆச்சார்யா, ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக நேர்மையாகவும், கடமை உணர்வோடும் பணி புரிந்ததற்காகவும், ஜெயலலிதா தரப்பினரின் சட்டத்திற்குப் புறம்பான கோரிக்கைகளுக் கெல்லாம் வளைந்து கொடுக்காததாலும், அவருக்குக் கிடைத்த பரிசு மன உளைச்சல் மட்டும்தான்.
 
ஆதிக்கசக்திக் கும்பல் தொடர்ந்து கொடுத்த தொல்லைகளாலும், அரசியல் ரீதியான அழுத்தத்தாலும், அவர் இறுதியில் ராஜினாமா செய்ய நேரிட்டிருக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நடந்த வினோத நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. 
 
ஜெயலலிதா தரப்பினர் மீது நடந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது, இது குற்றவியல் நீதிமன்றமா அல்லது ஒத்திவைப்பு நீதிமன்றமா என்று பெங்களூரு தனி நீதிபதி கேள்வி எழுப்பும் அளவுக்கு வாய்தாவுக்கு மேல் வாய்தாக்கள் கோரப் 
பட்டதை நீதிமன்றத் துறை சந்தித்தது.
 
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல் இருப்பதை வைத்தே, தீர்ப்பு வழங்கி விடுவேன் என்று தனி நீதிபதி பச்சாப்புரே கடும் எச்சரிக்கை விடும் அளவுக்கு நிலைமை முற்றியதோடு, நான் தனியாகக் கடந்த 6 மாதங்களாக நீதிமன்றத்தில் உட்கார்ந்து வருகிறேன். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதைப் போல உணருகிறேன் என்று அவர் தன்னுடைய மன வேதனையை வெளியிடும் அளவுக்கு நிகழ்வுகள் உருவாக்கப்பட்டன.
 
இப்படி தனி நீதிமன்ற நீதிபதிகளையும், பி.வி.ஆச்சார்யா போன்றவர்களையும் மன வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியவர்கள்தான், இன்றைக்கு உத்தமர்கள் போல வேடமணிந்து கொண்டு உலகத்தை ஏமாற்ற எத்தனிக்கிறார்கள்.
 
இதற்கெல்லாம் காரணம், வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வெகுளிகள் தமிழ் மக்கள் என்ற எண்ணத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?" இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.