வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 3 அக்டோபர் 2015 (18:24 IST)

தமிழக மீனவர்களை மீட்க கோரி ஜெயலலிதா மீண்டும் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்த கடிதத்தில், “நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்துள்ளது.
 
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை மிரட்டியும், நிராயுதபாணியாக இருக்கும் மீனவர்களை தாக்கியும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபடுவது, தமிழர்களை மீன்பிடிக்க விடாமல் செய்வதற்காகவே என்பது அனைவருக்கும் தெரியும்.
 
எனவே, தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க, இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாகப்பட்டினம் மீனவர்களையும் சேர்த்து 28 தமிழக மீனவர்களையும், 31 படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும்” என்று ஜெயலலிதா தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.