செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 25 மே 2016 (15:45 IST)

பரஸ்பர வணக்கம் சொல்லிக் கொண்ட ஜெ - ஸ்டாலின் : சட்டசபையில் ருசிகரம்

சட்டசபை கூட்டத்தின் முதல் நாளான இன்று, திமுக பொருளாலர் ஸ்டாலினும், முதலமைச்சர் ஜெயலலிதாவும் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார்கள்.


 

 
சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்று, சமீபத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதையடுத்து சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.
 
சட்டசபையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுக் கொள்வதற்காக சட்டசபைக்கு வந்திருந்தனர். மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி ஆகியோரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
 
அதை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் 10.48 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவர் உள்ளே நுழைந்ததும், திமுக எம்.எல்.ஏக்கள் உற்சாக மிகுதியில் மேஜையை தட்டி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். ஜெயலலிதா 10.52 மணிக்கு வந்தார். அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். 
 
அப்போது ஜெயலலிதா அங்கிருந்த அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவருக்கு நேர் எதிராக அமர்ந்திருந்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், ஜெ.விற்கு வணக்கம் கூறினார். அதற்கு ஜெயலலிதாவும் பதிலுக்கு ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தார்.
 
அவர்கள் இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்திக் கொண்ட விவகாரம் அங்கிருந்த பார்வையாளர்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.